வாஷிங்டன்: சிறைக்கைதி ஒருவர் மீது கொலை முயற்சி உள்பட்ட இதர குற்றங்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளாதாக அமெரிக்க நீதித் துறை அறிவித்துள்ளது.
சிறைக்கைதியான ஜான் டர்ஸ்கக், 52, முன்னாள் மினியாபொலிஸ் நகரின் காவல் துறை அதிகாரியான டெரிக் சொவினைக் கத்திபோல் அமைக்கப்பட்ட கூரான ஆயுதத்தால் 22 முறை பயங்கரமாகத் தாக்கியுள்ளார்.
கருப்பினத்தவரான திரு ஜார்ஜ் பிளாய்ட்டின் சமூக உரிமையை மீறி அவரைக் கொலை செய்த குற்றத்துக்கு முன்னாள் காவல் துறை அதிகாரி டெரிக் சொவின் தற்போது 41 ஆண்டுகளுக்கான சிறைத்தண்டனையை நிறைவேற்றி வருகிறார்.
கொலை முயற்சி மேற்கொள்ளுதல், கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்குதல், பயங்கரமான ஆயுதத்துடன் தாக்கி உடலில் ஆபத்தான காயங்களை ஏற்படுத்துதல் ஆகிய குற்றங்கள் டர்ஸ்கக் மீது சுமத்தப்பட்டுள்ளதாக அரசாங்க வழக்கறிஞர்கள் கூறினர்.
டர்ஸ்கக், மெக்சிகோவின் ‘மாஃபியா’ கும்பலில் உறுப்பினராக இருந்தபோது செய்த குற்றங்களுக்காக ஏற்கெனவே அந்தக் கூட்டாட்சிச் சீர்திருத்தச் சிறைச்சாலையில் 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனைக் கைதியாக இருக்கிறார்.
திரு ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதன் விளைவாக உலகெங்கிலும் ‘பிளேக் லைவ்ஸ் மெட்டர்’ (கருப்பினத்தவர் உயிர்களும் முக்கியம்) என்ற இயக்கம் தொடங்கிப் பல ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதன் தொடர்ச்சியாக, மெக்சிகோவின் குற்றப் பின்னணியைக் கொண்ட ‘மாஃபியா’ அமைப்புகளின் பதில் நடவடிக்கையாக அந்தத் தாக்குதலை தாம் மேற்கொண்டதாக டர்ஸ்கக் வாக்குமூலம் அளித்துள்ளதாக விசாரணையில் கூறப்படுகிறது.
டெரிக் சொவ் உயிருக்கு ஆபத்தில்லை என்று மினிசோட்டா அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரியின் அலுவலகம் தெரிவித்தது.