சோல்: தென்கொரிய அரசாங்கம் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய ‘மின்னிலக்க நாடோடி’ விசாவை வழங்கவிருக்கிறது.
சொந்த நாட்டில் வேலையில் நீடிக்கும் வெளிநாட்டினர் தென்கொரியாவில் ஈராண்டுகள் வரை தங்கியிருக்க இந்தப் புதிய விசா வகைசெய்யும்.
ஊழியர்கள் வேறு இடத்திலிருந்து வேலைசெய்யும் போக்கு அதிகரித்துவரும் நிலையில், தென்கொரியாவில் தங்கி அவ்வாறு சொந்த நாட்டில் வேலை செய்ய விரும்புவோர்க்கு உதவ, இந்தப் புதிய விசாவை அறிமுகப்படுத்த முடிவுசெய்ததாகத் தென்கொரிய நீதி அமைச்சு தெரிவித்தது.
தற்போது இத்தகைய வெளிநாட்டினர் சுற்றுப்பயண விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அல்லது அவர்கள் 90 நாள்களுக்குக் குறைவான காலத்திற்கே தென்கொரியாவில் தங்கி சொந்த நாட்டில் வேலை பார்க்கலாம் என்பதை அமைச்சு எடுத்துரைத்தது.
ஆண்டுக்கு 84.96 மில்லியன் வோனுக்கு ($86,700) மேல் வருமானம் ஈட்டுவோர் உரிய ஆவணங்களுடன் அவரவர் நாட்டில் உள்ள தென்கொரியத் தூதரகத்தில் இந்த விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.