சோல்:தென்கொரிய நாடாளுமன்றம் ஜனவரி 9ஆம் தேதியன்று நாய் இறைச்சி சாப்பிடுவதையும் விற்பதையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மசோதாவை நிறைவேற்றியது.
விலங்கு நலன் தொடர்பில் தென்கொரியாவில் வலுக்கும் ஆதரவுக்கு மத்தியில் பலநூற்றாண்டு வழக்கத்தைச் சட்டவிரோதமாக்கும் படியாக இது அமைந்துள்ளது.
ஒருகாலத்தில் ஈரப்பதம் மிக்க கோடைக்காலத்தின்போது நாய் இறைச்சியை உண்பது உடலுக்குப் பலத்தைக் கொடுக்கும் என்று கருதப்பட்டது.
ஆனால், இந்த வழக்கு அரிதாகிவிட்டது. தற்போது, பெரும்பாலும் வயதானவர்களே நாய் இறைச்சியை உண்கிறார்கள். நாய்களை வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப் பெரும்பாலான கொரியர்கள் விரும்புகின்றனர்.
நாய்களை அவற்றின் இறைச்சிக்காக கொல்லும்போது அவற்றின் உடலில் மின்சாரம் பாய்ச்சப்படுகிறது அல்லது அவை தூக்கிலிடப்படுகின்றன என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், இறைச்சிக்காகக் கொல்லும் முறைகளை மேலும் கருணையுடையதாக்குவதில் முன்னேற்றம் உள்ளதாக இந்த வர்த்தகத்தில் உள்ளோர் கூறுகின்றனர்.
இச்சட்டம் மூன்றாண்டு கால அவகாசத்திற்குப் பிறகு அமலுக்கு வரும். சட்டத்தை மீறினால் மூன்று ஆண்டு வரை சிறைத்தண்டனை அல்லது 30 மில்லியன் வான் (S$30,300) அபராதம் விதிக்கப்படும்.