புதுடெல்லி: கடந்த 2022ஆம் ஆண்டு இந்தியாவில் 461,312 சாலை விபத்துகள் நிகழ்ந்தன. அவற்றில் 168,491 பேர் உயிரிழந்தனர்; 443,366 பேர் காயமடைந்தனர்.
இந்தியாவின் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சு வெளியிட்ட புதிய அறிக்கை இவ்விவரங்களைத் தெரிவித்துள்ளது.
‘இந்தியாவில் சாலை விபத்துகள்-2022’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த அறிக்கையானது, 2021ஆம் ஆண்டைவிட 2022ஆம் ஆண்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 11.9 விழுக்காடு அதிகரித்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
அதுபோல, சாலை விபத்துகளில் மாண்டோர் எண்ணிக்கை 9.4 விழுக்காடும் காயமுற்றோர் எண்ணிக்கை 15.3 விழுக்காடும் கூடியதாக அவ்வறிக்கை கூறியது.
2022ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் 32.9 விழுக்காடு, அதாவது 151,997 விபத்துகள் விரைவுச்சாலைகள் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்தன.
மாநில நெடுஞ்சாலைகளில் 106,682 (23.1 விழுக்காடு) விபத்துகளும் எஞ்சிய 202,6233 (43.9 விழுக்காடு) விபத்துகள் மற்றச் சாலைகளிலும் நிகழ்ந்தன.
தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த விபத்துகளில் 61,038 பேரும் மாநில நெடுஞ்சாலை விபத்துகளில் 41,012 பேரும் மற்றச் சாலை விபத்துகளில் 66,441 பேரும் இறந்துவிட்டனர்.
மாநிலக் காவல்துறைகள் வழங்கும் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆண்டொருமுறை அறிக்கை வெளியிடப்படுகிறது.