கிரிக்கெட் விளையாட்டில் நடுவர் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள கட்டாக் மாவட்டத்தில் மன்ஹிசலந்தா என்னும் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் அணிகளுக்கான போட்டி நடைபெற்றது.
பிரம்மாபூர் அணிக்கும் ஷங்கர்பூர் அணிக்கும் இடையில் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருந்தது. லக்கி ராவத் என்னும் 22 வயது ஆடவர் நடுவராக இருந்தார்.
ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் பந்துவீச்சாளர் ‘நோ பால்’ வீசியதாக நடுவர் சைகை காட்டினார். ஆனால், அது ‘நோ பால்’ இல்லை என்று பந்து வீச்சாளரும் களக்காப்பில் (ஃபீல்டிங்) இருந்த அணி விளையாட்டாளர்களும் நடுவருடன் வாக்குவாதம் செய்யத் தொடங்கினர்.
வாய்ச்சண்டை திடீரென கைகலப்பாக மாறி மோதல் வெடித்தது. பந்து வீச்சாளரின் அணியினரும் எதிரணியினரும் மட்டையால் ஒருவரையொருவர் தாக்கினர். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் அணி வீரர் ஒருவர் நடுவர் லக்கி ராவத்தை கத்தியால் குத்தி விட்டார்.
அதனைக் கண்டு பதறிப்போன விளையாட்டாளர்கள், அவரை சி.பி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், அங்கு நடுவர் மாண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. கத்தியால் குத்தியதாக ஸ்முதிரஞ்சன் ராவத் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் மன்ஸிசலந்தா கிராமத்தில் பதற்றத்தைத் தூண்டியதால் கிராமத்தினருக்குள் மோதல் நிகழும் சூழல் ஏற்பட்டது. அதனால் அங்கு ஏராளமான காவற்படையினர் குவிக்கப்பட்டனர். நடந்த சம்பவம் குறித்து விசாரணை தொடருகிறது.