‘விளையாட்டுகளுக்கான பேரங்காடி’ என அழைக்கப்படும் பழமைவாய்ந்த குவீன்ஸ்வே பேரங்காடி, 1976ஆம் ஆண்டில் திறந்ததிலிருந்து இன்றுவரை பல மாற்றங்களைக் கண்டுள்ளது.
பல கடைகள் வந்துசென்றுள்ள நிலையில், சில தமிழர்களின் கடைகள் இன்றும் நிலைத்து நிற்கின்றன.
அவ்வகையில், பூப்பந்து, ‘டென்னிஸ்’, ‘ஸ்குவாஷ்’ போன்ற மட்டை விளையாட்டுகளுக்கான பொருள்களை விற்றுவரும் தமிழர்க் கடைகளான ‘ஹெலோ ஸ்போர்ட்ஸ்’, ‘ஸ்மேஷ் ஸ்போர்ட்ஸ்’, ‘நியூலிங்க் ஸ்போர்ட்ஸ்’ ஆகியவை 2000களிலிருந்து குவீன்ஸ்வேயில் செயல்பட்டு வருகின்றன. இன்று அவை ஒரே மாடியில் இயங்குகின்றன.
ஒரே இடத்தில், ஒரே வகையான பொருள்களை விற்கும்போது, அதுவும் இணைய வணிகங்கள் அதிகரித்துவரும் சூழலில், எவ்வாறு வர்த்தகங்களால் இப்போட்டிமிக்கச் சூழலைச் சமாளிக்க முடிகிறது?
சேவைத் தரத்தால் விசுவாசம்
“ஒவ்வொரு கடைக்கும் விசுவாசமான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.
“கடைகளுக்கிடையே விலையளவில் போட்டித்தன்மை உள்ளது. வெவ்வேறு சலுகைகளையும் தரமான சேவையையும் வழங்கி மக்களை ஈர்க்கிறோம்,” என்றார் ‘ஹெலோ ஸ்போர்ட்ஸ்’ஸை நடத்தும் அகமது ராஜாலி மரைக்காயர், 40.
சமூக ஊடகங்களில் விளம்பரம்
‘ஹெலோ ஸ்போர்ட்ஸ்’ அருகிலேயே இருக்கும் ‘ஸ்மேஷ் ஸ்போர்ட்ஸ்’ கடை, 2003லிருந்து குவீன்ஸ்வேயில் இயங்கி வருகிறது. தந்தை ஷேக் முகமது தொடங்கிய வணிகத்துக்குப் பக்கபலமாக இருக்கின்றனர் அவரது புதல்வர்கள் முகமது தீன் மரைக்கார், 34, முகமது ஹஷீம் மரைக்கார், 21.
சமூக ஊடகங்கள்வழி தங்கள் கடையைப் பெரிதளவில் விளம்பரப்படுத்தி வருகின்றனர் இச்சகோதரர்கள். ஏறக்குறைய இன்ஸ்டகிராமில் 24,000, யூடியூப்பில் 9,000, ஃபேஸ்புக் தளத்தில் 15,000, ‘டிக்டாக்’ தளத்தில் 1,43,500 ரசிகர்கள் எனப் பலரையும் கவர்ந்துள்ளனர்.
தங்கள் சமூக ஊடகங்களைப் பார்த்துவிட்டு சிங்கப்பூர் வரும் வெளிநாட்டவர் தங்கள் கடையை நாடுவதாகக் கூறினர்.
தொன்மையால் தனித்துவம்
1976ல் குவீன்ஸ்வே பேரங்காடி திறக்கப்பட்டபோது ‘மஹபூப்’ நிறுவனம் அங்கே ஆடை, அணிகலன்களை விற்கும் கடையைத் திறந்தது. இன்று ‘குவீன்ஸ்வே’யில் மூன்று கடைகளாக விரிவடைந்துள்ளது.
‘சிங்கப்பூரில் மற்ற இடங்களில் கிடைக்காத ‘பிராண்டட்’ உடைகளை, அனைத்து அளவுகளிலும் நாங்கள் விற்பதால் மக்கள் தேடி வருகின்றனர்,” என்றார் இரண்டாம் தலைமுறையாக வணிகத்தை நடத்திவரும் மஜஹருதீன், 58.
வாடிக்கையாளர் ரசனையை அறிந்திருத்தல்
குவீன்ஸ்வேயில் அதிகக் கடைகள் காலணிகளை விற்றாலும், “வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கேட்டு அறிந்து காலணிகளை தேர்ந்தெடுத்துக் கொடுப்பதால் வணிகம் நிலைத்துள்ளது,” என்றார் ‘எஸ்ஏஹெச்’ விளையாட்டு நிலைய மேலாளர் அஹ்மது.