வாடகை வீடுகளுக்கான தேவையைச் சமாளிக்கவும் வாடகை வீடுகளை நாடுவோருக்கு ஆதரவு தெரிவிக்கவும் பெரிய வாடகை வீடுகளில் அனுமதிக்கப்படும் குடியிருப்பாளர் எண்ணிக்கை தற்காலிகமாக உயர்த்தப்படுகிறது.
இந்தத் தற்காலிக ஏற்பாடு மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
இதன்படி, எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி முதல் 2026ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிவரை குறைந்தது 90 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நான்கறை அல்லது அதைவிடப் பெரிய வீடுகளுக்கான குடியிருப்பாளர் எண்ணிக்கை வரம்பு உயர்த்தப்படவுள்ளது.
இத்தகைய வீடுகளில் ஒரே குடும்பத்தைச் சேராத எட்டுப் பேர் வரை தங்கலாம். இதற்கு முன்னர் இந்த எண்ணிக்கை வரம்பு ஆறாக இருந்தது. இதை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், நகர மறுசீரமைப்பு ஆணையம் ஆகிய இரண்டும் புதன்கிழமையன்று கூட்டறிக்கை ஒன்றில் தெரிவித்தன.
“இந்தத் தற்காலிக ஏற்பாட்டை 2026ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி மறுபரிசீலனை செய்வோம்,” என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.
கொள்ளைநோய் சமயத்தில் கட்டுமானப் பணிகள் தாமதமடைந்ததால், வாடகை வீடுகளுக்கான தேவை வெகுவாக உயர்ந்ததாக அவர் விளக்கினார்.
இந்நிலையில், வீவக, தனியார் வீட்டு வாடகை இவ்வாண்டு ஜனவரி முதல் 20% உயர்ந்துவிட்டதாக நிதி அமைச்சு கூறுகிறது.
இதற்கு முன்னர் ஆண்டு அடிப்படையில் வீவக, தனியார் வீட்டு வாடகை 2022ஆம் ஆண்டில் 29.7% உயர்ந்ததாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒரே ஆண்டில் நிகழ்ந்த தனியார் வீட்டு வாடகையில் ஏற்பட்ட ஆகப் பெரிய உயர்வு இது என்றும் அமைச்சு கூறியது. அதேபேல் 2022ம் ஆண்டில் வீவக வீட்டு வாடகை 28.6% அதிகரித்தது என்று சொத்து விற்பனை நிறுவனமான ஆரஞ்சு டீ அண்ட் டை கூறியது. இது 15 ஆண்டுகளில் காணப்பட்ட ஆக அதிகமான உயர்வு என்றும் அது விளக்கியது.
கடன் வட்டி விகிதம், வரிகள், பணவீக்கம் அனைத்தும் உயர்ந்ததால் அந்த உயர்வை வீடுகளை வாடகைக்கு எடுப்போரின் தலையில் சொத்து உரிமையாளர்கள் சுமத்தினர்.
கொள்ளைநோய் ஓரளவு சீரான நிலையை அடைந்ததும் வெளிநாட்டவர், வெளிநாட்டு மாணவர்கள், உள்ளூர் நிரந்தரவாசிகள் ஆகியோரின் வருகை அதிகரித்ததால் வாடகை வீடுகளுக்கான தேவை அதிகரித்ததாக ஆய்வாளர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
“இதை சமாளிக்க வீடுகளின் எண்ணிக்கையை உயர்த்த உள்ளோம். இதன்படி, கிட்டத்தட்ட 100,000 வீடுகள் 2025ஆம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்கப்படும்.
“இதன் பயனாக தற்பொழுது வாடகை வீடுகளில் இருந்துகொண்டு வீடுகளுக்காக காத்திருப்போர் அந்த வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதும் வாடகை வீடுகளிலிருந்து வெளியேறி சொந்த வீடுகளில் குடியேறலாம்,” என்று கூறினார் அமைச்சர் டெஸ்மண்ட் லீ.