ரியாத்: இனி தான் ஐரோப்பாவில் விளையாடப் போவதில்லை என்று காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார். மேலும், சவூதி அரேபிய காற்பந்து லீக், எம்எல்எஸ் எனப்படும் அமெரிக்க காற்பந்து லீக்கைவிடச் சிறந்தது என்றும் அவர் கூறினார்.
தற்போது சவூதி அரேபியாவின் அல் நாசர் குழுவில் விளையாடுகிறார் போர்ச்சுகல் வீரரான ரொனால்டோ. அர்ஜென்டினிய நட்சத்திரமான லயனல் மெஸ்ஸி, எம்எல்எஸ் குழுவான இன்டர் மயாமியில் சேர்ந்துள்ளார்.
பெரும்பாலான ஐரோப்பிய லீக்குகள் களையிழந்து வருவதாகச் சொன்னார் 38 வயது ரொனால்டோ.
“எந்த ஐரோப்பிய குழுவிலும் நான் சேரமாட்டேன் என்பதை 100 விழுக்காடு உறுதியாகச் சொல்கிறேன். எனக்கு 38 வயதாகிவிட்டது,” என்று ரொனால்டோ கூறியதாக இஎஸ்பிஎன் ஊடகம் தெரிவித்தது.
“ஐரோப்பியக் காற்பந்தின் ஆற்றல் குறைந்துவிட்டது. ஒரு லீக் மட்டும்தான் இன்னமும் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறது. அது இங்கிலிஷ் பிரிமியர் லீக்தான். மற்ற லீக்குகளைவிட அது மிகச் சிறப்பாக உள்ளது,” என்றும் குறிப்பிட்டார் ரொனால்டோ.
2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரொனால்டோ அல் நாசரில் சேர்ந்தார். அக்குழுவில் இரண்டரை ஆண்டுகளுக்கு விளையாட வகைசெய்யும் 200 மில்லியன் யூரோ (297.3 மில்லியன் வெள்ளி) மதிப்பிலான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார்.