மயாமி: அர்ஜென்டின நட்சத்திர ஆட்டக்காரர் லயனல் மெஸ்ஸி, அமெரிக்காவின் இண்டர் மயாமி காற்பந்துக் குழுவுடன் 2025 வரை ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.
கடந்த ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் அர்ஜென்டினா கிண்ணத்தை ஏந்த வித்திட்ட 36 வயது மெஸ்ஸியை இண்டர் மயாமி ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தவிருக்கிறது. வரும் வெள்ளிக்கிழமை வாக்கில் அக்குழுவுக்காக மெஸ்ஸி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் குழுவிலிருந்து மாறிய மெஸ்ஸி, “எனது வாழ்க்கைத்தொழில் பயணத்தில் இண்டர் மயாமி குழுவுடன் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்க நான் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளேன்,” என்றார்.
மெஸ்ஸியின் வருகை அமெரிக்காவில் காற்பந்து விளையாட்டு மீதான ஆர்வத்தை மக்களிடையே அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இண்டர் மயாமியில் மெஸ்ஸியின் அறிமுக நிகழ்வைக் காண ஏறக்குறைய 18,000 பேர் வருகை புரிவர் என எதிர்பார்க்கப்படுகிறது.