பாட்னா: இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள அரசுப் பள்ளிகளிலிருந்து 2,087,063 மாணவர்களின் சேர்க்கைப்பதிவு ரத்து செய்யப்பட்டுவிட்டதாக கல்வி அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அம்மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வராமல் இருந்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது.
உரிய அதிகாரிகளிடம் முன்அனுமதி பெறாமல் தொடர்ந்து 15 நாள்களாகப் பள்ளிக்கு வராமல் இருந்ததையடுத்து, பீகார் மாநிலக் கல்வி அமைச்சு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சேர்க்கைப்பதிவு நீக்கப்பட்டோரில் 266,564 பேர், 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள்.
தங்கள் பிள்ளைகள் இனியும் அத்தவற்றைச் செய்யமாட்டார்கள் என அம்மாணவர்களின் பெற்றோர்கள் உறுதிமொழிக் கடிதம் அளித்தால் மட்டுமே அவர்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
பள்ளிக்கு வராமலிருக்கும் மாணவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கே.பதக் உத்தரவிட்டுள்ளார்.