கள்ளப்பணத்தை நல்லப் பணமாக்கும் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வெளி நாட்டவர் ஒருவருடன் தொடர்புடைய தொழிலதிபர், திடீரென செப்டம்பர் மாதம் சிங்கப்பூரிலிருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வந்தரான அவருடன் இணைந்து பணியாற்றிய மேலும் இருவரும் சிங்கப்பூரில் இல்லை என்பதும் சோதனைகளில் தெரிய வந்தது.
திரு சு பிங்ஹாய், கம்போடியக் குடியுரிமையை வைத்திருப்பவர். வனுவாட்டு, செயின்ட் கிட்ஸ் அண்ட் நவிஸ் ஆகிய நாடுகளின் கடப்பிதழ்களையும் அவர் வைத்திருக்கிறார்.
சீன சட்டத்தின்படி ஒருவர் இரண்டு குடியுரிமைகளை வைத்திருக்க முடியாது.
சிங்கப்பூரில் திரு சு பிங்ஹாய் ஆறு நிறுனங்களில் பங்குதாரராகவும் இயக்குநராகவும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நிறுவனங்களில் அவர் பங்குதாரராக மட்டும் இருக்கிறார்.
திரு சு பிங்ஹாயின் நிறுவனங்களில் ஆறுக்கு அவர் வாடகைக்கு எடுத்த வீட்டின் முகவரி பதிவுசெய்யப்பட்டது. ஆடம் சாலைக்கு அருகே உள்ள ஜாலான் அசுஹான் பகுதியில் இருக்கும் வாடகை உயர்தர பங்களாதான் (குட் கிளாஸ் பங்களா) சிங்கப்பூரில் அவரின் முகவரியாகும்.
ஹாங்காங் உள்ளிட்ட பகுதிகளிலும் அவருக்கு சொத்துகள் உள்ளன.
திரு சு பிங்ஹாய், சிங்கப்பூரில் உள்ள நியூ ஃபியூச்சர் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்கப் பங்குகளுக்குச் சொந்தக்காரர். அவர், காவல்துறை அக்கறை கொண்டுள்ள ஒருவர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
திரு சு பிங்ஹாய் என்ற பெயரைக் கொண்ட ஒருவர் சிங்கப்பூரிலும் ஹாங்காங்கிலும் சைப்ரஸ் குடியிரிமை உள்ள வாங் டேஹாய் என்பவருடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதைக் காட்டும் தகவல்கள் கண்டறியப்பட்டன. விசாரணை நடத்தி செய்திகளை அறியும் (இன்வெஸ்டிகேட்டிவ் ரிப்போர்ட்டிங்) முயற்சியில் ஈடுபட்டுள்ள திட்டமிடப்பட்ட குற்றங்கள், ஊழல் செய்தி அமைப்புடன் (ஒசிசிஆர்பி) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இணைந்து செயல்பட்டு இத்தகவல்களைச் சேகரித்தது.
இணைய சூதாட்டக் கும்பலுடன் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் வாங், சீனாவில் தேடப்பட்டுவரும் ஒருவர். அவர் முன்பு சீன நாட்டவராக இருந்தவர்.
கள்ளப்பணத்தை நல்லப் பணமாக்கும் விவகாரம் தொடர்பில் சிங்கப்பூரில் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று கைது செய்யப்பட்ட 10 பேரில் அவரும் ஒருவர்.