‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே.பாபு தயாரிப்பாளராக அறிமுகமாகும் படத்தின் நாயகனாக கெளதம் ராம் கார்த்திக் நடிக்கிறார்.
அரசியலை மையமாக வைத்து உருவாகும் புதுப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. கௌதம் கார்த்திக் உடன் அஞ்சனா நேத்ரன், செல்வராகவன், ராபி, பி. வாசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் அப்படத்தில் நடிக்கவுள்ளனர்.
டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற படப்பூசையில் ராஜு முருகன், ஹெச்.வினோத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
படம் குறித்து பேசிய கணேஷ் கே.பாபு, “நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவரின் அரசியல் வாழ்வை நகைச்சுவையுடன் எடுத்துரைக்கும் படம் இது. அதற்குத் தேவையான ஆழமும் திறனும் கௌதம் கார்த்திக்கிடம் உள்ளது. எதார்த்தத்தையும் நகைச்சுவையையும் சமநிலைப்படுத்தும் அவரின் திறமை இப்படத்திற்கு மிகப் பெரிய பலமாக இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.
ராஜூ முருகனிடம் உதவியாளராகப் பணிபுரிந்த தினா ராகவன் இயக்குநராக இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
தற்போது ரவி மோகன் நடித்து வரும் ‘கராத்தே பாபு’ படத்தினை இயக்கி வருகிறார் பாபு.

