புதுடெல்லி: உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பெற்றுள்ளார். இப்பட்டியலில் இம்முறை மூன்று இந்தியப் பெண்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை, ஆண்டுதோறும் உலக அளவில் சக்தி வாய்ந்தவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ‘2025க்கான சக்திவாய்ந்த பெண்கள்’ பட்டியலை அந்தப் பத்திரிகை தற்போது வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இப்பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இந்த ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் முதல் பெண் இவர்.
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு 24ஆம் இடம் கிடைத்துள்ளது. இந்தியப் பொருளியல் கொள்கையை வடிவமைப்பதில் நிர்மலா, முக்கியப் பங்காற்றியதாக ‘ஃபோர்ப்ஸ்’ அவரைப் பாராட்டியுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த ‘பயோகான்’ நிறுவனத் தலைவர் கிரண் மஜும்தார் ஷா, 83வது இடத்தில் உள்ளார்.
‘ஹெச்சிஎல்’ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ரோஷிணி நாடார் மல்ஹோத்ராவுக்கு 76வது இடம் கிடைத்துள்ளது. இவர் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஷிவ் நாடாரின் ஒரே மகள் ஆவார்.

