கலைந்த முடி, கறுப்பு நிறம் சகிதமாய் கலையுலகில் சிவாஜி ராவாக கால்பதித்து, கனவுலக நாயகர்களின் இலக்கணத்திற்கு புது வடிவம் தந்த 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நேற்று தனது 72வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
வேகமான நடை, விதவிதமான உடல் பாவனை, வித்தியாசமான வசன உச்சரிப்பு, வியக்க வைக்கும் நடிப்பு, விறுவிறுப்பான சண்டை என இந்த விந்தை மனிதரின் சிறப்புகள் தமிழ்த் திரை ரசிகர்களின் சிந்தையில் ஆழமாக பதிந்த ஒன்று.
ஆன்மிகத்தின் ஆழம் அறிந்த இந்த அபூர்வ திரை நாயகன், 1950 டிசம்பர் 12ஆம் தேதி, கர்நாடக மாநிலம் பெங்களுருவில் பிறந்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணா மடத்துப் பள்ளியான 'ஆச்சார்யா பாடசாலை'யில்தான் தனது பள்ளிப்படிப்பை படித்தார். தியானம், பிராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சி எல்லாம் இந்தப் பள்ளியில் கற்று, பக்தி அனுபவங்கள் கிடைக்கப் பெற்றார்.
சிவாஜிராவ் என்ற மனிதருக்குள் ஒளிந்திருந்த நடிகரை முதன் முதலில் அடையாளம் கண்டது இவரது நண்பர் ராஜ்பகதூர். சினிமாவிற்கு வருவதற்கு முன் தொழில் துறையில் எடுபிடியாக இருந்து, மூட்டை தூக்கும் தொழிலாளியாக, தச்சுப் பட்டறை தொழிலாளியாக பல வேலைகளில் ஈடுபட்டார்.
பின்னர் கர்நாடகா போக்குவரத்துக் கழகத்தில் சிவாஜி நகர், சாம்ராஜ் பேட்டையை இணைக்கும் 134 எண் கொண்ட பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்தார். நடிப்பின்மீது கொண்ட ஆர்வத்தால் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து, நடிப்புத் துறையில் பயிற்சி பெற்றார்.
அங்கு கே.பாலசந்தரின் பார்வை இவர் மீது பட 1975ல் அவரது இயக்கத்தில் வெளிவந்த 'அபூர்வ ராகங்கள்' படத்தில் நடிகராக அறிமுகமானார்.
சிவாஜிராவ் என்ற இவரது இயற்பெயரையும் சினிமாவிற்காக ரஜினிகாந்த் என பெயர் மாற்றம் செய்தார் இயக்குநர் பாலசந்தர்.
"பைரவி வீடு இதுதானா?", "நான் பைரவியின் புருஷன்" என்று தனது நண்பர் கமல்ஹாசனிடம் பேசிய வசனமே, ரஜினி திரைப்படத்தில் பேசிய முதல் வசனங்கள்.
'மூன்று முடிச்சு', 'அவர்கள்', '16 வயதினிலே', 'ஆடு புலி ஆட்டம்', 'காயத்ரி' என ஆரம்ப காலங்களில் தொடர்ந்து வில்லனாக நடித்தார் ரஜினி.
முதன் முதலில் குணச்சித்திர வேடமேற்று இவர் நடித்த திரைப்படம்தான் 'புவனா ஒரு கேள்விக்குறி?'.
"பைரவி வீடு இதுதானா?" என்று ரஜினி திரையில் பேசிய முதல் வசனத்தின் முதல் வார்த்தை 'பைரவி'தான் ரஜினி கதாநாயகனாக நடித்து வெளிவந்த முதல் படம்.
தமிழ்த் திரையுலகின் ஆளுமை இயக்குநர்களில் ஒருவர் என அறியப்படும் இயக்குநர் மகேந்திரனின் 'முள்ளும் மலரும்' படத்தின் முதல் கதாநாயகனும் இவரே. ரஜினிகாந்த் இரட்டை வேடமேற்று நடித்த முதல் திரைப்படமும் இயக்குநர் மகேந்திரனின் 'ஜானி' திரைப்படம்தான்.
'ராஜ ராஜ சோழன்' திரைப்படத்திற்குப் பின் சினிமாஸ்கோப்பில் உருவான முதல் சமூக திரைப்படம், ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 'காளி'. ரஜினி நடிப்பில் வந்த முதல் முழுநீள நகைச்சுவை திரைப்படம் 'தில்லு முல்லு'.
சிவாஜியின் ரசிகரான நடிகர் ரஜினிகாந்த், திரைத்துறைக்கு வருவதற்கு முன் அவரின் மனம் கவர்ந்த நடிகராக இருந்தவர் நடிகர் நாகேஷ். தனது நண்பரும் நடிகருமான கமல்ஹாசனோடு இணைந்து ஏறக்குறைய 18 திரைப் படங்கள் வரை நடித்திருக்கின்றார்.
எம்ஜிஆருக்குப் பின் 'சத்யா மூவீஸ்' தயாரிப்பில் 'இராணுவ வீரன்' முதல் 'பாட்ஷா' வரை 6 படங்களில் நடித்திருந்தார். ஏவிஎம் நிறுவனத்திற்காக ரஜினி நடித்த முதல் படம் 'முரட்டுக்காளை'. இந்தப் படத்தில்தான் ரஜினிகாந்திற்கு 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டம் உறுதி செய்யப்பட்டது. ரஜினி கதை, திரைக்கதை எழுதி தயாரித்த முதல் திரைப்படம் 'வள்ளி'.
1983ல் 'அந்தா கானூன்' என்ற ஒரு வெற்றிப்படத்தின் மூலம் தனது பாலிவுட் கலையுலகப் பிரவேசத்தை துவக்கினார் ரஜினி. ரஜினி நடித்த ஒரே ஹாலிவுட் திரைப்படம் 'ப்ளட் ஸ்டோன்'.
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த 'பாட்ஷா' திரைப்படம்தான் அவரது அரசியல் பார்வையை உலகுக்கு காட்டியது.
தமிழகத்தில் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்த 'முத்து' திரைப்படம், ஜப்பான் நாட்டில் திரையிடப்பட்டு அங்கும் ரஜினிக்கு ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது.
தென்னிந்தியாவில் அதிக நாட்கள் ஓடிய திரைப்
படம் என்ற பெருமையை பெற்றது ரஜினியின் 'சந்திரமுகி' படம். அந்தப் படம் 890 நாட்கள் ஓடியது.
சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்த 'சிவாஜி', 'எந்திரன்' திரைப்படங்கள் பல சாதனைகள் புரிந்து, தமிழ் திரையுலகில் புதிய வரலாறு படைத்தன.
எதிர்பார்த்த அளவு ஓடாத ரஜினியின் திரைப்படம் 'பாபா'. தற்பொழுது நவீன தொழில்நுட்பத்துடன், டிஜிட்டல் வடிவில் புதுப்பொலிவுடன் ஒரு சில மாற்றங்களுடன், அவரது பிறந்த நாளை ஒட்டி வெளியாகி உள்ளது.
1996ல் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்
தலின்போது, அப்போதைய ஆளுங்கட்சியான
அதிமுகவிற்கு எதிராக இவர் பேசியது அதிமுகவின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
அதன் காரணமாக ரஜினி ரசிகர்கள், ரஜினி முதல்வர் பதவிக்கு போட்டியிட அழைப்பு விடுத்த வண்ணம் இருந்தனர். இறுதியில் தேர்தலை சந்திக்கப்போவதாக கூறிய ரஜினி பின்னர் உடல்நிலை உள்ளிட்ட பிரச்சினைகளைக் காரணம் காட்டி பின்வாங்கினார்.
'பத்மபூஷன்', 'பத்மவிபூஷன்', 'தாதா சாகேப் பால்கே' என மத்திய அரசின் விருதுகள் கிடைக்கப் பெற்று கௌரவிக்கப்பட்டார் ரஜினி. தமிழக அரசின் 'கலைமாமணி விருது', 'எம் ஜி ஆர் விருது', 'தமிழ்நாடு அரசு சினிமா விருது', 'பிலிம் ஃபேர் விருது' என இவர் வாங்கிய விருதுகளின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்.
அயராத உழைப்பும், அற்பணிப்பு உள்ளமும் கொண்டிருந்தால், சாமானியனும் சாதிக்க இயலும் என்பது, சூப்பர் ஸ்டார் ரஜினி கடந்து வந்துள்ள பாதை உணர்த்தும் உண்மை.