“நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்ப வேண்டாம்,” என நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும், தங்கள் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு நடிகர், நடிகையரைத் தேர்வு செய்ய முகவர்கள் யாரையும் நியமிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
“எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் எச்சரிக்கிறோம்,” என்றும் அந்நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக பிரபல தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர்கள், இயக்குநர்கள் பெயரில் இத்தகைய மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
நடிப்பில் ஆர்வம் உள்ளவர்களைக் குறிவைத்து சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி மோசடி நடைபெறுகிறது.

