ஆ. விஷ்ணு வர்தினி
ஆசிய நாகரிக அரும்பொருளகம், நல்வாழ்வு போதிக்கும் மரபுடைமையையும் கலாசாரக் கூறுகளையும் மக்களுக்காக ஒருங்கிணைத்துள்ளது.
‘பாடி அண்ட் ஸ்பிரிட் என்ற சிறப்புக் கண்காட்சி, ‘ஆர்ட் ஆஃப் வெல்னெஸ் விழா ஆகியவற்றுடன், ‘புத்தா ரெலிக்ஸ், ‘வேல்வேல்’ என்ற இரு சிறிய கண்காட்சிகளையும் மக்கள் காணலாம்.
இம்மாதம் முதல் இரு வார இறுதிகளில் நடந்தேறிய ‘ஆர்ட் ஆஃப் வெல்னெஸ்’ விழா, மனநலனைப் பேணுவதற்கான பலதரப்பட்ட வாழ்வியல் முயற்சிகளை மக்களுக்குப் பயிலரங்குகளின் மூலம் அறிமுகப்படுத்தியது.
அரும்பொருளக இரண்டாம் தளத்தில் அமைந்துள்ள ‘மைண்ட்ஃபுல்னஸ் லேப், நவீன முறையிலான மனநலப் பழக்கங்களை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பினைத் தருகிறது.
வரலாற்றிலும் மரபுடைமையிலும் எவ்வகையான நல்வாழ்வு ஆலோசனைகள், வரையறைகள் உள்ளன என்பதைக் காட்டும் ‘பாடி அண்ட் ஸ்பிரிட்’ சிறப்புக் கண்காட்சியில், பல்வேறு சமயங்களின் 100க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை மக்கள் காணலாம்.
இஸ்லாமிய, இந்து, பௌத்த சமயத்தினரின், மலைவாழ் மக்களின் மரபுகளைத் தெரிந்து கொள்வதற்கு இவை உதவும்.
சிங்கப்பூரில் தைப்பூச விழாவின் வரலாற்றையும் கொண்டாட்ட வழக்கங்களையும் காட்டும் ‘வேல்வேல்’ கண்காட்சி, காவடி வகைகள், விரத முறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. தொடக்க கால தைப்பூசப் படக்காட்சிகள், வெவ்வேறு வகையான அலகுகள் முதலியவை இக்கண்காட்சியில் இடம்பெற்று இருக்கின்றன.
“நல்வாழ்வை மையப்படுத்தி இவ்வாண்டு புதிய முறையில் கண்காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்துள்ளோம்,” என்று ஆசிய நாகரிக அரும்பொருளகத்தின் கல்விப் பிரிவு துணை நிர்வாகி மெலிசா விஸ்வானி தெரிவித்தார்.
ஆசிய நாகரிக அரும்பொருளகத்தின் இம்முயற்சிகள் மக்களுக்குப் பயனளிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இக்கண்காட்சிகள் அடுத்தாண்டு மார்ச் 26ஆம் தேதி வரை நீடிக்கும். டிசம்பர் 31ஆம் தேதி வரை நுழைவுச்சீட்டு சலுகைகளை மக்கள் நாடலாம்.www.acm.org.sg. முகவரியில் மேல் விவரங்களைப் பெறலாம்.