திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாப சுவாமி கோவிலில் இருந்து 13 பவுன் தங்கக்கட்டி ஒன்று மாயமானதால் பரபரப்பு நிலவுகிறது.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் எவ்வாறு தங்கம் மாயமானது என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந்தக் கோவிலுக்கு மூன்று வாசல்கள் உள்ளன. இதில் தலை வாசல் பகுதியில் புதிய தங்கத்தகடுகள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக கோவிலில் உள்ள பாதுகாப்பு அறையில் இருந்து நாள்தோறும், குறிப்பிட்ட அளவிலான தங்கம் எடுக்கப்பட்டு பணி முடிந்த பின்னர் மீண்டும் அங்கேயே வைக்கப்படும்.
கடந்த 7ஆம் தேதி இவ்வாறு பணி முடிந்ததும் மீதமிருந்த தங்கம் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்ட நிலையில், இரண்டு நாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தங்கத்தை எடுத்தபோது, 13 பவுன் எடையுள்ள தங்கக்கட்டியைக் காணவில்லை.
இது தொடர்பாக, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கோவில் ஊழியர்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டனர். மேலும், கோவில் முழுவதும், அதன் சுற்றுப்புறங்களிலும் தீவிரமாகத் தேடியபோதும், தங்கக்கட்டி தென்படவில்லை.
காவல்துறை வழக்குப் பதிந்து, கோவில் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துவருகின்றனர்.