புதுடெல்லி: அமேசான், ஃபிளிப்கார்ட் மின்வணிகத் தளங்களின் சேமிப்புக் கிடங்குகளில் இந்தியத் தர நிர்ணய ஆணையம் (பிஐஎஸ்) அதிரடிச் சோதனை நடத்தி, தரம் குறைந்த ஆயிரக்கணக்கான பொருள்களைப் பறிமுதல் செய்தது.
இம்மாதம் 19ஆம் தேதி டெல்லியில் ஒரு தொழிற்பேட்டையில் அமைந்துள்ள அமேசான் சேமிப்புக்கிடங்கில் பிஐஎஸ் அதிகாரிகள் 15 மணி நேரம் சோதனையிட்டனர். அதில் 3,500 மேற்பட்ட மின்கருவிகளை அவர்கள் கைப்பற்றினர். அவற்றின் தோராய மதிப்பு ரூ.70 லட்சம் (S$109,300) எனக் கூறப்பட்டது.
ஃபிளிப்கார்ட்டின் துணை நிறுவனமான இன்ஸ்டகார்ட் சர்விசஸ் நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில் விளையாட்டாளர்கள் அணியும் 590 இணைக் காலணிகள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் தயாரிப்பு நிறுவனத்தின் முத்திரை இல்லை என்றும் அவற்றின் மதிப்பு ரூ.600,000 என்றும் வியாழக்கிழமை (மார்ச் 27) வெளியிடப்பட்ட அதிகாரத்துவ அறிக்கை தெரிவித்தது.
தரநிலைகளை அமல்படுத்துவது தொடர்பில் பிஐஎஸ் அமைப்பு நாடு முழுவதும் மேற்கொண்டுவரும் சோதனைகளின் ஒரு பகுதியே இது.
கடந்த பிப்ரவரி மாதமும் டெல்லி, குருகிராம், ஃபரிதாபாத், லக்னோ, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல இடங்களில் இத்தகைய அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டன.