சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரன் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்ட நடவடிக்கையைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன், மாணவியை வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால், சென்னை மாநகரக் காவல் ஆணையர் அவரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து அவரது தாயார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதற்கிடையே, பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு மகளிர் சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
இது தொடர்பான விசாரணையின்போது, “ஏற்கெனவே மூல வழக்கில் தண்டனை பெற்றுச் சிறையில் உள்ளவர் மீது, குண்டர் சட்ட நடவடிக்கை தேவையா?” என நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு திங்கள்கிழமை (டிசம்பர் 15) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஞானசேகரன் மீதான குண்டர் தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

