கோல்கத்தா: இந்தியாவில் ஓடும் ரயிலில் எட்டு மாதக் கைக்குழந்தைக்கு மூச்சு தந்து உயிரைக் காப்பாற்றியிருக்கிறார் ராணுவ வீரர் ஒருவர்.
இந்திய ராணுவத்தில் மருத்துவ உதவி வாகனப் பணியாளராகப் பொறுப்பு வகிக்கும் சிப்பாய் சுனில், இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டவர். புதுடெல்லி-திப்ருகார் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்யும்போது ஒரு கைக்குழந்தைக்கு சிபிஆர் முறையின் மூலம் வாய்வழி மூச்சு தந்து உயிரைக் காப்பாற்றினார்.
“உடனடியாக மருத்துவ உதவி இல்லாத சூழலில் நேரத்துக்கு அவர் எடுத்த நிபுணத்துவமிக்க செயல் ஓர் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது,” என்று இந்திய ராணுவம் அறிக்கையில் தெரிவித்தது.
இவ்வாரத் தொடக்கத்தில் புதுடெல்லி-திப்ருகார் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அக்குழந்தை திடீரென மூச்சுப் பிரச்சினை ஏற்பட்டதால் சுயநினைவை இழந்தது. தனது குழந்தை மாண்டுவிட்டதாக எண்ணிய தாயார் மயங்கி விழுந்தார். இதர குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர் என்று ராணுவம் தெரிவித்தது.
விடுமுறை முடிந்து ரயிலில் மீண்டும் சேவைக்குத் திரும்பிக்கொண்டிருந்த சுனில், உடனடியாக உதவிக்குச் சென்று சிபிஆர் முறையின் மூலம் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.