போடி திமுக நிர்வாகி ரூ.100 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு: அமலாக்கத் துறை தகவல்

1 mins read
cc3cf568-cd5b-4555-9bb9-be3d207ed59c
போடியில் அமலாக்கத் துறை சோதனை நடத்திய ஏலக்காய் கிடங்கு. (உள்படம்) நகராட்சித் தலைவர் ராஜராஜேஸ்வரி, அவரின் கணவர் சங்கர். - படம்: இந்து தமிழ் திசை

தேனி: தேனி மாவட்டம், போடியைச் சேர்ந்த திமுக மாநில செயற்குழு உறுப்பினரும் 29வது வார்டு கவுன்சிலரும் ஏலக்காய் வர்த்தக நிறுவன உரிமையாளருமான சங்கர் (போடி நகராட்சித் தலைவர் ராஜ ராஜேஸ்வரியின் கணவர்) மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்துள்ளது.

வட மாநிலங்களுக்கு உரிய ஆவணங்களின்றி பல டன் ஏலக்காய் விற்பனை செய்ததன் மூலம் ரூ.100 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 6ஆம் தேதி, சங்கருக்குச் சொந்தமான கிடங்கு, அவருடைய அலுவலகம் ஆகியவற்றில் அமலாக்கத் துறை, வருமானம் மற்றும் வணிக வரித் துறையினர் சோதனை நடத்தினர்.

சங்கர், அவரது மனைவி ராஜ ராஜேஸ்வரி, மகன் லோகேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும், சங்கருடன் தொடர்பில் உள்ள தனியார் பள்ளித் தாளாளர் வேதாஜெயராஜ், கவுன்சிலர் முருகேசன், முன்னாள் நகராட்சித் தலைவரும் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவருமான பழனிராஜன், கார் ஓட்டுநர் வடிவேலு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 7 மாதங்களில் நடந்த வங்கிப் பரிவர்த்தனைகள், பணப் பரிமாற்றம், ஏலக்காய் அனுப்பப்பட்ட நிறுவனங்கள் குறித்த விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் சாட்சிகள் எதிராக இருப்பதால், சங்கர் மீது விரைவில் கைது நடவடிக்கை இருக்கலாம் என அமலாக்கத் துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்