புதுடெல்லி: கட்டுமானப் பொருள்களில் முக்கியமாகக் கருதப்படும் செங்கல்லின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்துடன் அதற்கான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என்று அகில இந்திய செங்கல், ஓடு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
டெல்லியில் அந்த அமைப்பின் பேச்சாளர் ஒருவர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
செங்கற்களுக்கான ஜிஎஸ்டியை உடனடியாகக் குறைக்க வேண்டும். இல்லையெனில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்று அந்தப் பேச்சாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செங்கல், கிராவல், சல்லிக்கற்கள், எம்சாண்ட், சிமென்ட், மணல் உள்ளிட்ட அனைத்துக் கட்டுமானப் பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்துடன், ஜிஎஸ்டியும் அதிகமாக உள்ளது. அதனால் இந்தியாவின் பல இடங்களில் நடுத்தர வசதிகொண்ட மக்கள், சொந்த வீடு கட்டும் கனவை நனவாக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அண்மையில் அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி குறைப்பால் குறிப்பாகச் சிமெண்டு, செங்கல், கற்கள் போன்ற அடிப்படைக் கட்டுமானப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியில் கணிசமான தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், அகில இந்திய செங்கல், ஓடு உற்பத்தியாளர் கூட்டமைப்பு செங்கற்களுக்கான ஜிஎஸ்டியை மேலும் குறைக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
செங்கற்களுக்கு 12% ஜிஎஸ்டி மற்றும் நிலக்கரியிலான பொருள்களுக்கு 18% ஜிஎஸ்டி உள்ளது. அவற்றை 5% விழுக்காடாகக் குறைக்க வேண்டும் என்று கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.