மும்பை: ஷில்பா ஷெட்டியை வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றால் ரூ.60 கோடியை செலுத்த மும்பை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
தொழிலதிபரை ஏமாற்றி ரூ.60 கோடி மோசடி செய்ததாக ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா இருவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டுப் பயணத்திற்கு அனுமதி கேட்டும் பொருளியல் குற்றப்பிரிவு பிறப்பித்துள்ள ‘லுக் அவுட்’ நோட்டீசை ரத்துசெய்யுமாறும் அவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுமீதான விசாரணையின்போது, முதலில் மோசடி வழக்கு தொடர்பாக 60 கோடி ரூபாயைச் செலுத்திவிட்டு, பின்னர், வெளிநாட்டுப் பயணம் குறித்து பரிசீலனை செய்யுமாறு நீதிமன்றம் கண்டிப்பாக தெரிவித்துள்ளது.
வழக்கு வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மும்பை ஜூகு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் தீபக் கோத்தாரியிடம் ஷில்பா ஷெட்டியும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் ரூ.60 கோடியே 48 லட்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
பணத்தை அவர்கள் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா உள்ளிட்ட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.