புதுடெல்லி: கடந்த 2008ஆம் ஆண்டு மூடப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த ஏஜேஎல் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை ஒரு தரப்பால் அபகரிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பான வழக்கில் ரூ.700 கோடி சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 1937ஆம் ஆண்டு ஏஜேஎல் என்ற நிறுவனம் சார்பாக நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடங்கப்பட்டது. 5,000க்கும் அதிகமான சுதந்திரப் போராட்ட வீரர்கள் இதில் பங்குதாரர்களாக இருந்தனர்.
பத்திரிகை நிறுத்தப்பட்டபோது ஏஜேஎல் நிறுவனம், காங்கிரஸ் கட்சிக்கு, ரூ.90 கோடி கடன்பட்டிருந்தது. இதை வசூலிக்க, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்குதாரராக உள்ள யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ரூ.50 லட்சத்தை செலுத்தி ஏஜேஎல் நிறுவனத்தை கையகப்படுத்தியது. இதன்மூலம் ஏஜேஎல் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை யங் இந்தியா பிரைவேட் நிறுவனம் முறைகேடாக அபகரித்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.
இந்த வழக்கில்தான் அமலாக்கத்துறை தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


