மும்பை: போக்குவரத்து நெரிசலால் விழிபிதுங்கிய நிலையில் உள்ள மும்பையில் புதிய சுரங்கப் பாதைகள் அமைக்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மும்பையில் புதிய சாலைகள், மெட்ரோ வழித்தடங்களை அமைப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகச் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பை மாநகரில் தற்போது போக்குவரத்து சராசரி வேகம் ஒரு மணிநேரத்துக்கு 20 கிலோமீட்டராக உள்ளது. எனினும், காலை, மாலை நேரங்களில் வாகனப் போக்குவரத்து உச்சத்தில் இருக்கும்போது இந்த வேகம் 15 கிலோமீட்டராகக் குறைந்துபோகிறது.
இதையடுத்து, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளுக்கு அடியில் புதிய சுரங்கப் பாதைகள் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக முதல்வர் பட்னாவிஸ் கூறினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மும்பையில் பல்வேறு பகுதிகளில் இச்சுரங்கப் பாதைகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றார் அவர்.
மும்பை புறநகர் ரயில்களில் நாள்தோறும் 90 லட்சம் பேர் பயணம் மேற்கொள்வதாகச் சுட்டிக்காட்டிய அவர், இந்த ரயில் சேவையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், மும்பை மெட்ரோ ரயில்களைப் போன்று அனைத்து புறநகர் மின்சார ரயில்களிலும் குளிரூட்டி (ஏசி) வசதி செய்யப்படும் என்றும் இதற்காகப் பயணிகளிடம் இருந்து கூடுதலாக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் முதல்வர் பட்னாவிஸ் தெரிவித்தார்.

