புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தினார்.
டெல்லி காற்று மாசுபாடு பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் வியாழக்கிழமை (டிசம்பர் 4) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் வெறும் அறிக்கை வெளியிடுவதைத் தவிர்க்கவேண்டும். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பிரச்சினையின் தீவிரத்தை எடுத்துக்காட்டும் வகையில் சில எம்.பி.க்கள் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
போராட்டத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பேசுகையில், “டெல்லியில் காற்று மாசுபாடு மிக மோசமடைந்துள்ளது. அதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பது அரசின் பொறுப்பாகும். இந்தப் பிரச்சினையால் குழந்தைகளும் முதியவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்றார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா கூறுகையில், “காற்று மாசுபாடு அரசியல் விவகாரம் அல்ல. அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்,” என்றார்.
காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பல தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

