பெங்களூரு: கொவிட்-19 தொற்று மீண்டும் தலையெடுத்துவரும் நிலையில், அதனால் பாதிக்கப்பட்டோர் ஒரு வாரம் வீட்டிலேயே தனித்திருக்க வேண்டும் என்று இந்தியாவின் கர்நாடக மாநிலம் அறிவித்துள்ளது.
அந்த ஏழு நாள்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுப்பு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்யும்படி கர்நாடகச் சுகாதார, குடும்ப நல்வாழ்வு அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் வலியுறுத்தியுள்ளார். இது அரசாங்க ஊழியர்களுக்கும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் பொருந்தும்.
“ஒருவேளை நோயாளி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால், அவர் முழுமையாகத் தேறும்வரை நிறுவனங்கள் அவருக்கு விடுப்பு அளிக்க வேண்டும்,” என்று திரு ராவ் கூறியுள்ளார்.
அத்துடன், வீட்டில் தனித்திருக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய பராமரிப்பும் மருத்துவக் கவனிப்பும் கிடைப்பதை உறுதி[Ϟ]செய்ய சுகாதாரத் துறை அதிகாரிகள் அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று, அவர்களின் உடல்நிலையைக் கண்காணிப்பர்.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, கொவிட்-19 தொற்றிய 423 பேர் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
குழந்தைகளிடம் வேகமாகப் பரவுவதால், குழந்தைகளின் கொவிட்-19 தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் அவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று அமைச்சர் ராவ் அறிவுறுத்தி இருக்கிறார்.