ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.
இதையடுத்து, அந்த மாநிலம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தற்காலிகமாக மூடப்பட்டன.
இதனால் ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வைஷ்ணவத் தேவி கோயிலுக்கான ஆன்மிக யாத்திரையும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், சுற்றுலாத் துறைக்குப் புத்துயிர் அளிக்கவும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் ஜம்மு காஷ்மீர் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, அந்த மாநில முதல்வர் உமர் அப்துல்லா கடந்த மாதம் அமைச்சரவைக் கூட்டத்தைப் பஹல்காம் பகுதியில் நடத்தினார். அப்போது, சுற்றுலாத் தலங்களை மீண்டும் திறக்க வேண்டும் என அமைச்சரவை அழைப்பு விடுத்திருந்தது.
“காஷ்மீர் மற்றும் ஜம்மு பகுதிகளில் உள்ள சில சுற்றுலாத் தலங்களை மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ளேன். பஹல்காமில் உள்ள பெடாப் பள்ளத்தாக்கு மற்றும் பூங்காக்கள், வெரினாக் தோட்டம், கோகெர்னாக் தோட்டம், அச்சபால் தோட்டம் ஆகியவை இன்று முதல் திறக்கப்படும்,” என்று துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தனது எக்ஸ்தள பக்கத்தில் பதிவிட்டார்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள 48 சுற்றுலாத் தலங்களில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலாத் தலங்கள் மட்டுமே தற்போது முதல் கட்டமாகத் திறக்கப்பட்டுள்ளது.