சென்னை: சென்னையில் பல ஆயிரம் கிளிகளுக்கு தினசரி உணவளித்து பிரபலமடைந்த சேகர் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை (டிசம்பர் 11) காலமானார்.
பறவை மனிதர் என்று அழைக்கப்பட்ட ஜோசஃப் சேகர் கேமரா பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தின் மாடியில் அங்கு வந்த சில கிளிகளுக்கு உணவளித்து வந்தார். பின்னர் பல ஆயிரம் கிளிகள் தினசரி அவரது வீட்டு மாடியை நோக்கி வந்தன. அவற்றுக்கு அவர் தினசரி குறிப்பிட்ட நேரத்தில் இருபது ஆண்டுகளாக உணவளித்து வந்தார்.
இவர், கிளிகளுக்கு உணவளிப்பதை பல ஊடகங்கள் நேர்காணல் செய்து ஆச்சரியத்துடன் தகவல்களை வெளியிட்டுள்ளன.
ஆனால் சேகர், வாடகை வீட்டில் வசித்து வந்தார். வீட்டைக் காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் கூறியதால் அந்த வீட்டை வாங்க சேகர் முயற்சி செய்தார். அது நடக்காமல் போனதால் கிளிகளுக்கு அவரால் உணவளிக்க முடியவில்லை. வீட்டைக் காலி செய்து இரண்டு ஆண்டுகளாக கிளிகளுக்கு உணவளிக்க முடியாததை அவர் வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் டிசம்பர் 11ஆம் தேதி காலமானார்.
இவரது மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

