புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, தனது அரசு பூர்வமான அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று எகிப்து நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றார்.
மத்திய கிழக்கு நாட்டுக்கான பிரதமர் மோடியின் வருகையால் எகிப்துடனான பலதரப்பட்ட உறவுகளும் மேலும் வலுடையும் என்று எகிப்துக்கான இந்தியத் தூதர் அஜித் குப்தே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “ஜூன் 24ஆம் தேதியான நேற்றுமுதல் இன்று (25ஆம் தேதி) வரை பிரதமர் மோடியின் கெய்ரோ பயணம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக அமையும். ஏனெனில், இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான இந்தியப் பிரதமர் ஒருவரின் இருதரப்புப் பயணம் இதற்கு முன்பாக 1997ல்தான் நடந்தது.
“எகிப்து, இந்தியாவுக்கு இடையே நெருங்கிய பாதுகாப்பு உறவுகள் உள்ளன. இந்த இருநாடுகளும் கூட்டுப் பயிற்சிகள், பயிற்சித் திட்டங்கள் போன்றவற்றில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றன.
“கடந்த இரண்டு ஆண்டுகளாக இரு நாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வலுவடைந்துள்ளது.
“எகிப்தில் தங்கி இருக்கும்போது பிரதமர் மோடி ஹிலியோபோலிஸ் போர் நினைவுச் சின்னத்திற்கு செல்கிறார். இந்த நினைவுச் சின்னம் எகிப்தில் நடந்த பல்வேறு போர்களில் உயிரிழந்த 3,799 இந்திய வீரர்களின் நினைவாக கட்டப்பட்டது.
“11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அல் ஹக்கிம் மசூதிக்கும் பிரதமர் செல்கிறார். அதேபோல் ஏமனில் உள்ள முதல் உலகப் போரில் உயிர் நீத்த 600 இந்திய வீரர்களுக்கான போர் நினைவு சின்னத்துக்கும் பிரதமர் செல்கிறார். எனவே, அவை ஒரு நெகிழ்ச்சியான தருணங்களாக இருக்கும்.
“பிரதமர் மோடி இங்கிருக்கும் இந்திய சமூகத்தினரையும் சந்திக்கிறார். எகிப்தில் மிகவும் குறைவான இந்தியர்களே இருக்கிறார்கள். அவர்கள் எகிப்துக்கு முதல்முறையாக வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க மிகவும் ஆவலுடன் உள்ளனர். எனவே, நாங்கள் ஒரு சமுதாய சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.