பாரிஸ்: பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜன் ஆப் ஹானர்’ விருதை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் வழங்கிக் கௌரவித்தார்.
இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்தியாவுடனான நட்புணர்வை உயர்ந்த நிலையில் வெளிப்படுத்தும் வகையில், பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜன் ஆப் ஹானர்’ விருது பிரதமர் மோடிக்கு அதிபர் இம்மானுவேல் மேக்ரனால் வழங்கப்பட்டது.
இதற்குமுன் இந்த விருதை, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, இங்கிலாந்தின் தற்போதைய அரசர் சார்லஸ், ஜெர்மனியின் முன்னாள் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் உள்ளிட்ட தலைவர்கள் பெற்றுள்ளனர்.
“இந்த சிறப்பு மரியாதைக்கு இந்திய மக்கள் சார்பாக அதிபர் மேக்ரனுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்,” என்று தெரிவித்துள்ளார்.
பிரான்சின் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள வந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார். பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன், பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்றார். அங்கு அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எலிசி அரண்மனையில் பிரதமர் மோடிக்கு அதிபர் மேக்ரானும் அவரது மனைவி பிரிகரும் உற்சாக வரவேற்பளித்து விருந்தளித்தனர்.
முன்னதாக பிரதமர் மோடி, அங்குள்ள இந்திய சமூகத்தினர் நடத்திய வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்தியாவின் ‘UPI’ இனிமேல் பிரான்சில் பயன்படுத்தலாம்.
இந்தியாவின் வெற்றிகரமான பணபரிமாற்றச் சேவையான UPI-ஐ இனிமேல் பிரான்சில் பயன்படுத்தலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரான்சின் ஈபிள் டவரில் இருந்து இந்த முறை தொடங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் சுற்றுலாச் செல்லும் இந்தியர்கள் கையில் ரொக்கம் வைத்திருக்கவேண்டாம். யுபிஐ பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம்.