ஜெய்ப்பூர்: பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரோனும் ஜெய்ப்பூர் நகரில் உள்ள தேநீர்க் கடையில் ஒன்றாகத் தேநீர் அருந்தினர்.
அப்போது தேநீருக்கான கட்டணத்தை அதிபர் இமானுவல் மெக்ரோன், ‘யுபிஐ’ பணப்பரிமாற்ற முறையின் கீழ் செலுத்தினார்.
இந்தியாவில் 75வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரோன். இதற்காக இரண்டு நாள் பயணமாக அவர் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை வந்தடைந்தார்.
அவரை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். இதையடுத்து, ஜெய்ப்பூரில் நடைபெற்ற கலாசார நிகழ்ச்சியையும் கைவினைப் பொருள்கள் கண்காட்சியையும் பிரான்ஸ் அதிபர் கண்டு மகிழ்ந்தார்.
இதையடுத்து, ஜந்தர் மந்தர் பகுதியில் அதிபர் மேக்ரானை வரவேற்ற பிரதமர் மோடி, அங்குள்ள தேநீர்க் கடைக்கு அழைத்துச் சென்றார். இருவரும் அங்கு தேநீர் அருந்தி மகிழ்ந்தனர். அப்போது தேநீருக்குரிய தொகையை அதிபர் மெக்ரோன் ‘யுபிஐ’ மூலம் செலுத்தினார்.
இது தொடர்பான காணொளியும் புகைப்படங்களும் இணையத்தில் பரவலாக வலம்வருகின்றன.