கூட்டுத் தற்காப்புத் தயாரிப்புக்கு இந்தியா, பிரான்ஸ் இணக்கம்

கூட்டுத் தற்காப்புத் தயாரிப்புக்கு இந்தியா, பிரான்ஸ் இணக்கம்

2 mins read
9784901d-9442-4edb-b106-ba3568f78fe7
இந்தியா-பிரான்ஸ் இடையிலான உறவை வலுப்படுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோனும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்திய ஆயுதப் படைகளுக்கு ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட தற்காப்புக்குத் தேவையான சாதனங்களை ஒன்றிணைந்து தயாரிக்க இந்தியாவும் பிரான்சும் இணங்கியுள்ளன.

நட்பு நாடுகளுக்கும் தற்காப்புக்குத் தேவையான சாதனங்களை ஒன்றிணைந்து தயாரிக்க இருநாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளன.

பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன் இந்தியாவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்திய அதிபர் திரௌபதி முர்மு ஏற்பாடு செய்திருந்த அரசு உபசரிப்பு விழாவில் அதிபர் மெக்ரோன் கலந்துகொண்டார்.

அதிபர் மெக்ரோனும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துப் பேசினர்.

தற்காப்புத் தயாரிப்பு, அணுவாயுத எரிசக்தி, விண்வெளி ஆராய்ச்சி முதலியவற்றுடன் பருவநிலை மாற்றம், சுகாதாரம், விவசாயம் போன்ற பொதுச் சேவைகளுக்குச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் இருநாட்டு உறவை விரிவுபடுத்த இரு தலைவர்களும் இணக்கம் தெரிவித்ததாக இந்திய அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

ரஷ்யாவை அடுத்து, இந்தியாவுக்கு ஆக அதிகமான ஆயுதங்கள் விநியோகிக்கும் நாடாக பிரான்ஸ் உள்ளது.

கடந்த 40 ஆண்டுகளாக பிரான்சிடமிருந்தே அதிக போர் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்து வருகிறது.

போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை பராமரிக்கவும் பழுதுபார்க்கவும், இயந்திரங்களை மாற்றியமைக்கவும் இந்தியாவில் சேவை நிலையத்தை பிரான்சின் சஃப்ரான் நிறுவனம் அமைக்க இருக்கிறது.

இதைப் பிரதமர் மோடியும் அதிபர் மெக்ரோனும் வரவேற்றனர்.

கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து பிரதமர் மோடியும் அதிபர் மெக்ரோனும் சந்தித்திருப்பது இது ஐந்தாவது முறையாகும்.

இந்நிலையில், ஹெலிகாப்டர்களை ஒன்றிணைந்து தயாரிக்க இந்தியாவின் டாட்டா குழுமமும் பிரான்சின் ஏர்பஸ் நிறுவனமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் வினேய் குவாட்ரா தெரிவித்தார்.

இந்தியப் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த இருநாடுகளும் இணங்கியுள்ளன.

பிரான்சில் உயர் கல்வி கற்க இந்திய மாணவர்களுக்கு ஏற்புடைய சூழல் அமைத்துத் தரப்படும் என்றார் அதிபர் மெக்ரோன்.

பிரான்சில் உயர் கல்வி கற்க ஒவ்வோர் ஆண்டும் அதிகபட்சம் 30,000 இந்திய மாணவர்களை ஈர்க்க அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
மோடிபிரான்ஸ்