சண்டிகர்: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் செவ்வாய்க்கிழமை (மே 27) நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் மோசமாகக் காயமடைந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை நேரத்தில் மஜிதா சாலையின் நடமாட்டம் இல்லாத பகுதியில் குண்டு வெடித்ததாகக் கூறப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.
அவர் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் மாண்டார்.
உயிரிழந்தவர் பாபர் ஹல்சா எனும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்ததாகக் காவல்துறை கூறியது.
அவரது பெயர் உட்பட மேல்விவரங்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.
பாகிஸ்தானில் கடத்திவரப்பட்ட வெடிபொருள்களை அந்தப் பயங்கரவாதி எடுத்துச் செல்லும்போது குண்டு வெடித்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

