இணைய மோசடி: ஆறு மாதங்களில் ரூ.21 கோடி சுருட்டிய காய்கனி வணிகர்

இணைய மோசடி: ஆறு மாதங்களில் ரூ.21 கோடி சுருட்டிய காய்கனி வணிகர்

2 mins read
சீனா, சிங்கப்பூர், ஹாங்காங்கிற்குப் பணம் அனுப்ப மோசடிக் கும்பல்களுக்கு உதவி
d3bc9f45-1677-45e7-a308-7aa2b33f8a17
மோசடிக் கும்பல்களுக்கு உதவி, தரகு மூலம் பெரும்பணம் ஈட்டிய ரிஷப் சர்மா (அமர்ந்திருப்பவர்). - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

குர்கான்: வீட்டிலிருந்து வேலைசெய்து பணம் ஈட்டலாம் என்று கூறி மோசடி செய்து, ரூ.21 கோடி (S$3.44 மில்லியன்) சுருட்டிய 27 வயது ஆடவரைக் காவல்துறை கைதுசெய்தது.

இந்தியாவின் ஹரியானா மாநிலம், குர்கான் பகுதியைச் சேர்ந்தவர் ரிஷப் சர்மா. இவர் கொவிட்-19 பரவலுக்குமுன் காய்கறி, பழம் விற்று வந்தார். அத்தொற்றுப் பரவலால் அவர் தமது தொழிலைக் கைவிட வேண்டியதாயிற்று.

அதன்பின், வருமானம் ஈட்ட ரிஷப் குறுக்குவழியை நாடினார்.

பத்து மாநிலங்களில் பதிவாகியுள்ள 37 மோசடி வழக்குகளில் இவருக்கு நேரடித் தொடர்புள்ளது என்றும் மேலும் 855 பேருக்கு மோசடியில் உதவியுள்ளார் என்றும் காவல்துறை தெரிவித்தது.

சென்ற மாதம் 28ஆம் தேதி உத்தராகண்ட் காவல்துறையிடம் இவர் சிக்கினார். பணத்தைக் கைமாற்றிவிட இவர் கொடுத்த வங்கிக் கணக்கு விவரங்களையும் காவல்துறை கண்டுபிடித்தது.

அனைத்துலக அளவில் செயல்படும் மோசடிக் கும்பல்களுக்காக இவர் வேலை செய்திருக்கலாம் என்றும் சீனா, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு ஹவாலா பணத்தையும் மின்னிலக்க நாணயத்தையும் அனுப்ப இவர் உதவியிருக்கலாம் என்றும் காவல்துறை ஐயப்படுகிறது.

ரிஷப் தமது வேலைகளுக்காக அனைத்துலக மோசடிக் கும்பல்களிடமிருந்து பெருந்தொகை பெற்றதாகவும் அதன்மூலம் ஆறே மாதங்களில் ரூ.21 கோடி சேர்த்துவிட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

“சில ஆண்டுகளுக்குமுன் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் ரிஷப் காய்கறி, பழம் விற்று வந்தார். மற்ற வணிகர்களைப் போலவே, கொரோனா பரவல் காலத்தில் இவரும் பேரிழப்பைச் சந்தித்ததால், தொழிலைக் கைவிட வேண்டியதாயிற்று. அடுத்த சில மாதங்களுக்கு, வீட்டிலிருந்தே பல வேலைகளைச் செய்து குடும்பச் செலவுகளைச் சமாளித்தார். அதன் பிறகு, ஏற்கெனவே இணைய மோசடிகளில் ஈடுபட்டு வந்த பழைய நண்பர் ஒருவரை ரிஷப் சந்தித்தார். அவரது வழியைப் பின்பற்றி இவரும் ஆறு மாதங்களில் 21 கோடி ரூபாயைச் சம்பாதித்துவிட்டார்,” என்று டேராடூன் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் (இணையக் காவல்துறை) அங்குஷ் மிஸ்ரா விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்