புதுடெல்லி: எஸ்ஐஆர் என்னும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளுக்கு இண்டியா கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், எஸ்ஐஆர் பணிகளை நிறுத்தக்கோரி மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் மாபெரும் பேரணி நடைபெற்றது.
பங்கான் சந்த்பாரா பகுதியில் இருந்து தாகூர் நகரில் உள்ள மத்வா வரை 3 கி.மீ. தூரத்திற்கு மம்தா பேரணியில் ஈடுபட்டார். மேற்கு வங்க அமைச்சர்கள், திரிணாமூல் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
முதல்வர் மம்தா, தாகூர் நகரில் உள்ள ஒரு பள்ளியில் உரையாற்றினார். அந்த உரையில், “ரயில்கள், விமானங்கள், எல்லைகள் ஆகிய அனைத்துமே மத்திய அரசின் அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.
“கடப்பிதழ், சுங்கம், கலால் வரி அனைத்தையுமே மத்திய அரசு கவனித்துக்கொள்கிறது. பின்னர் எப்படி மேற்கு வங்கத்தில் வங்கதேசத்தினரை நாங்கள் ஊடுருவ வைத்தோம் என்கின்றனர் பாஜகவினர்.
“எஸ்ஐஆர் பணிகளை அவசர அவசரமாகச் செய்கிறார்கள். மக்களாகிய உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால் மத்தியில் ஆளும் பாஜக அரசும் நீக்கப்பட வேண்டும். இவ்வளவு அவசரமாக எஸ்ஐஆர் பணிகள் ஏன் நடக்கின்றன,” என்று முதல்வர் மம்தா கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், ஆளும் கட்சியான பாஜகவைப் பற்றி நான் ஒருபோதும் அஞ்ச மாட்டேன். அந்தக் கட்சி அரசியல் ரீதியாக என்னை எதிர்த்துப் போராடி தோற்கடிக்க முடியாது. 2026ல் பாஜக ஆட்சி இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்தார்.

