புதிய சமிக்ஞை முறை, மேம்படுத்தப்பட்ட ரயில் பெட்டிகளுடன் சரியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த சோதனை செய்வதற்காக, புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி ரயில் சேவை இரண்டு நாள்களுக்கு நிறுத்தப்படும்.
ஆகஸ்ட் 31, செப்டம்பர் 21ஆம் தேதிகளில் இந்த ரயில் பாதை மூடப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையமும் புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி சேவையை இயக்கும் எஸ்எம்ஆர்டியும் ஜூலை 30ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன.
‘உண்மையான இயக்க நிலவரத்தைப் பாவனை செய்து’ புதிய சமிக்ஞை முறையைச் சோதிக்க இந்த ஏற்பாடு உதவும் என்று ஆணையமும் எஸ்எம்ஆர்டியும் தெரிவித்தன.
பயணிகள் சேவைக்காக இவை தொடங்கப்படும்போது, புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி சேவையின் பல்வேறு அமைப்புகள் பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையுடனும் செயல்பட முடியும் என்பதை உறுதிப்படுத்தவே இந்த ஏற்பாடு என்று அவை மேலும் கூறின.
ஆகஸ்ட் 31, செப்டம்பர் 21ஆம் தேதிகளில், சுவா சூ காங் நிலையத்திலிருந்து பெட்டிர் வழியாக புக்கிட் பாஞ்சாங் நோக்கி, புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி சேவை ‘பி’ திசையில், எல்ஆர்டி ஷட்டல் ‘பி’ பேருந்துச் சேவை ஐந்து முதல் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும்.
புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டியின் சமிக்ஞை முறையையும் ரயில் பெட்டிகளையும் புதுப்பிக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதாக ஆணையமும் எஸ்எம்ஆர்டியும் தெரிவித்தன.
19ல் 14 புதிய மூன்றாம் தலைமுறை இலகு ரயில் பெட்டிகள், பயணிகள் சேவைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், 13ல் 11 இரண்டாம் தலைமுறைப் பெட்டிகள் மேம்படுத்தப்பட்டு மீண்டும் சேவைக்குத் திரும்பியுள்ளன.