அழுக்கான இடம்: கேலாங் உணவகத்துக்கு இடைக்காலத் தடை

1 mins read
88721fe2-9180-4012-8679-6757c872077b
கேலாங் ரோடு ‘ஏ9’ உணவகத்தை இரண்டு வாரங்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: கூகல்

கேலாங்கில் உள்ள ஓர் உணவகம் அசுத்தமாக இருந்த காரணத்தால் அதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நூடல்ஸ், டம்ப்ளிங்ஸ் போன்றவற்றுக்குப் பெயர்போன 105 கேலாங் ரோடு #01-01ல் செயல்படும் ‘ஏ9’ உணவகத்துக்கு சிங்கப்பூர் உணவு அமைப்பு நவம்பர் 5 முதல் நவம்பர் 18 வரை கடையை மூட உத்தரவிட்டுள்ளது.

‘ஏ9’ மொத்தம் 14 குற்றப் புள்ளிகளைப் பெற்றுள்ளது. உணவகத்தைத் தூய்மையாக வைத்திருக்கத் தவறியதற்காகவும் உதவியாளரை முறைப்படி பதிவு செய்யாததாலும் அதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கூகல் தேடலில் ‘ஏ9’ நூடல் டம்ப்ளிங் என அந்த உணவகத்துக்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்க்லேன் கடைத் தொகுதியில் மற்றொரு கிளை இருப்பதையும் காட்டுகிறது.

பன்னிரண்டு மாதங்களுக்குள் 12 அல்லது மேற்பட்ட குற்றப் புள்ளிகளை உணவகம் பெற்றிருந்தால் இரண்டு அல்லது நான்கு வாரங்களுக்கு இடைக்காலமாக மூட உத்தரவிடப்படும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்ப்உ தெரிவித்தது.

உணவகத்தில் உணவைக் கையாள்பவர்களும் உணவுத் தூய்மை அதிகாரியும் மீண்டும் உணவுப் பாதுகாப்புக்கான சான்றிதழ் பெற்ற பிறகே உணவகத்தை மீண்டும் நடத்த முடியும்.

பொதுமக்கள், உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள் மோசமாக இருந்தால் 6805 2871 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்