வாகனம் ஓட்டச் சொல்லித்தரும் பயிற்றுநர் போல செயல்பட்டு 14 மாணவர்களிடம் கட்டணம் வசூலித்த ஆடவர் ஒருவர் மீது புதன்கிழமை (நவம்பர் 13) நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
டான் டெங் ஹாக், 65, எனப்படும் அவரிடம் வாகன ஓட்ட சொல்லித்தருவதற்கான பயிற்றுநர் உரிமம் எதுவும் இல்லை.
இருப்பினும், 2023 டிசம்பர் முதல் 2024 ஏப்ரல் வரை பயிற்றுநர் போல அவர் செயல்பட்டார்.
மாணவர்களுக்கு வாகனம் ஓட்டச் சொல்லித் தந்து அதற்காக அவர் கட்டணம் வசூலித்தார். அந்தத் தொகை எவ்வளவு என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை.
உரிமமின்றி வாகனப் பயிற்றுநராக செயல்பட்டதாக டான் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அவரை அந்தக் குற்றம் செய்யத் தூண்டியதாக ஃபோங் சோங் ஃபாட், 70, என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அந்த இருவர் மீதான வழக்கு டிசம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
உரிமம் இன்றி வாகனங்களை ஓட்டச் சொல்லித்தரும் பயிற்றுநராகச் செயல்பட்ட குற்றத்திற்கு ஆறு மாத சிறை, $2,000 வரையிலான அபராதம் ஆகியன விதிக்கப்படலாம்.

