இயோ சூ காங் தனித்தொகுதியில் மீண்டும் மசெக வேட்பாளராகக் களம் கண்டுள்ள யிப் ஹான் வெங், 48, கடந்த தேர்தல் அனுபவத்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் பகிர்ந்துகொண்டார்.
2020 பொதுத் தேர்தலில் அந்தத் தொகுதியில் முதல்முறை போட்டியிட்டபோது வாக்காளர்களிடம் தம்மை அறிமுகம் செய்துகொள்ள குறைவான வாய்ப்புகளே இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால், வாக்காளர்களிடம் தம்மை அறிமுகம் செய்வது சவாலாக இருந்தது என்றார் திரு யிப்.
“புதிய வேட்பாளர் என்பதால் முகத்தை வாக்காளர்கள் பார்ப்பது அவசியம். நீங்கள் யார் என்பதைக் காண அவர்கள் விரும்புவர். ஆனால், முகக்கவசத்தால் முகம் பாதி மறைக்கப்பட்டு இருந்ததால் அடையாளப்படுத்துவது கடினமாக இருந்தது,” என்று திரு யிப் கூறினார்.
தற்போது ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மக்களிடம் அவர் பிரபலமடைந்துவிட்டதற்கு அடையாளமாக புளோக் 628ல் உள்ள அங் மோ கியோ சந்தை வழியாகவும் சுற்றுவட்டார வீடமைப்பு புளோக்குகளைக் கடந்தும் திரு யிப் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) சென்றபோது குடியிருப்பாளர்கள் பலரும் அவரை உற்சாகமாக வாழ்த்தினர்.
மீண்டும் போட்டியிடுவது குறித்து அவர்களில் சிலர் கருத்துக் கேட்ட அதேவேளையில், பலர் அவருக்கு உறுதியான ஆதரவு வழங்குவதாகக் கூறினர்.
இயோ சூ காங் தொகுதியில் மூத்தோருக்குக் கூடுதல் வசதி அளிக்கும் திட்டங்கள் உள்ளதாக செய்தியாளரிடம் திரு யிப் தெரிவித்தார்.
2020 பொதுத் தேர்தலில் இயோ சூ காங் தனித்தொகுதியில் முதன்முறை களமிறங்கிய அவருக்கு எதிராக சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் காய்லா லாவ் போட்டியிட்டார். இறுதியில், 60.82 விழுக்காட்டு வாக்குகளுடன் திரு யிப் வென்றார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தத் தேர்தலில் அவருக்கு எதிராக சீர்திருத்த மக்கள் கூட்டணி சார்பில் மைக்கல் ஃபாங் களமிறங்கி உள்ளார்.

