சுவையும் ஊட்டச்சத்தும் நிறைந்த புதிய உணவு வகைகளை உருவாக்குவோரை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது சிங்கப்பூர்.
சிங்கப்பூர் உணவு அமைப்பு இதன் தொடர்பில் ஆய்வாளர்களுக்கும் துறைசார்ந்த பங்காளிகளுக்கும் மானியம் வழங்க அழைப்பு விடுத்துள்ளது.
மாற்றுப் புரதப் பொருள்களின் செயல்திறனை மேம்படுத்தும் தீர்வுகளை உருவாக்கும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பாரம்பரிய புரதச்சத்துப் பொருள்களைவிட அவற்றின் சுவை, வாசனை போன்ற அம்சங்களை மேம்படுத்தும் வேளையில், ஊட்டச்சத்து அதே அளவிலோ மேம்பட்டதாகவோ இருக்கவேண்டியது அவசியம்.
வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஏற்புடைய வகையில் உணவுப் பொருள்களை உருவாக்குவது இலக்கு.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் கோ போ கூன், நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற உலகளாவிய வேளாண்-உணவு அறிவியல் கருத்தரங்கில் உரையாற்றியபோது அந்த மானியம் குறித்துத் தெரிவித்தார்.
சிங்கப்பூர் அனைத்துலக வேளாண்-உணவு வாரத்தை ஒட்டி அந்தக் கருத்தரங்கு நடைபெற்றது.
டாக்டர் கோ தமது உரையில், சிங்கப்பூர் அதன் 90 விழுக்காட்டுக்கு மேற்பட்ட உணவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதால், உலகளாவிய உணவுப் பொருள் விநியோகத் தடைகளால் அது எளிதில் பாதிக்கப்படக்கூடும் என்பதைக் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அறிவியல், தொழில்நுட்ப மேம்பாடுகளைப் பயன்படுத்துவதால் உள்ளூர் வேளாண் உற்பத்தித் திறன்களை வளர்க்கவும் வருங்காலத்திற்கான மீள்திறன்மிக்க, நீடித்த நிலைத்த உணவுக் கட்டமைப்பை உருவாக்கவும் இயலும் என்றார் அவர்.
முன்னதாக, நவம்பர் 18ஆம் தேதி நடைபெற்ற வேளாண்-உணவு வாரத் தொடக்க நிகழ்ச்சியில் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் கலந்துகொண்டார்.
சிங்கப்பூர் உணவுத் தொழில்துறை ஆய்வு, மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நவம்பர் மாத நடுப்பகுதி நிலவரப்படி, உணவு தொடர்பிலான ஆய்வு, மேம்பாட்டுப் பணிகளுக்கு மானியமாக $40 மில்லியன் வழங்கப்படுவதாக அறிவித்தார்.
அந்த ஆய்வுத் திட்டங்கள், துல்லிய மரபணுக் கருவிகளைப் பயன்படுத்தி மரபணு ரீதியாக மேம்பட்ட விதைகளை உருவாக்குதல், மீன்பண்ணைகளில் நோய்களைத் திறம்படக் கையாளுதல், செயற்கை இறைச்சியின் விலையைக் குறைத்தல் ஆகிய இலக்குகளைக் கொண்டுள்ளன.

