கேலாங் வட்டாரத்தில் நிகழ்ந்த வாக்குவாதத்தின்போது ஆடவர்கள் இருவர் கைத்தடியைப் பயன்படுத்தி தம்பதியரைத் தாக்கினர்.
தாக்குதல் நிகழ்ந்து சில மணி நேரத்தில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அபாயகரமான ஆயுதத்தைப் பயன்படுத்தி வேண்டுமென்றே காயம் விளைவித்ததாக 39 வயது லீ சீ இயாவ், 38 வயது டான் கூன் சியோங் இருவர் மீது வியாழக்கிழமை (நவம்பர் 13) குற்றம் சுமத்தப்பட்டது.
செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 11) லோராங் 24 கேலாங்கில் மாலை 6.50 மணி அளவில் உலோகக் கைத்தடியைப் பயன்படுத்தி ஆடவர் ஒருவரின் முகத்திலும் உடலிலும் அவர்கள் இருவரும் அடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தாக்கப்பட்ட ஆடவருக்கு வலது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாது, அவரது இரண்டு பற்கள் உடைந்தன. அவர் அதே நாளன்று மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவருடன் இருந்த பெண்ணுக்கு என்ன ஆனது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
விசாரணை நடத்தியும் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தும் லீயையும் டான்னையும் அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி ஆகியவை விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
லீயும் டான்னும் டிசம்பர் 11ஆம் தேதியன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர்.

