புக்கிட் கேன்பரா வட்டாரவாசிகள் தோட்டம் அமைக்கப் புதிதாக 50 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேசியப் பூங்காக் கழகத்தின் தோட்டக்கலை ஒதுக்கீட்டுத் திட்டத்தின்கீழ் இது ஒதுக்கப்பட்டுள்ளது.
புக்கிட் கேன்பரா வட்டாரத்தையும் சேர்த்து 140க்கும் மேற்பட்ட இடங்களில் தோட்டங்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட இடங்கள், ஏற்கெனவே தோட்டங்கள் உள்ள இடங்கள் என 16 பகுதிகளில் இடம் வழங்கப்படுகிறது.
தோட்டம் வைக்க விரும்புபவர்கள் தேசியப் பூங்காக் கழகத்தில் விண்ணப்பிக்கலாம்.
டிசம்பர் 2ஆம் தேதி காலை 10 மணி முதல் டிசம்பர் 15ஆம் தேதி இரவு 11.59 மணிவரை விண்ணப்பங்கள் அனுப்பலாம் என்று தேசியப் பூங்காக் கழகம் திங்கட்கிழமை (டிசம்பர் 1) அறிக்கை வெளியிட்டது.
தற்போது தோட்டங்கள் வைத்துள்ளவர்களின் குத்தகைக் காலம் முடியும் நிலையில் இருந்தால் அவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தோட்டத்திற்கான இடங்கள் ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, ஜூரோங் ஏரிக்கரைப் பூந்தோட்டம், பொங்கோல் பூங்கா, ஈசூன் பூங்கா ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கும்.
2016ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் பூங்காக்களில் காய்கறிகளை பயிரிட ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்குத் தோட்டக்கலை ஒதுக்கீட்டுத் திட்டம் என்று பெயரிடப்பட்டது. தற்போது அத்திட்டம் விரிவாக்கம் கண்டு வருகிறது.
சிங்கப்பூரில் தோட்டம் அமைக்க 29 பூங்காக்களில் 2,500க்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

