சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) செப்டம்பர் 1 முதல் மின்சிகரெட் புழக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளைக் கடுமையாக்கப்போவதாக அறிவித்துள்ளது.
மின்சிகரெட்டுகள் இல்லாத பல்கலைக்கழக வளாகம் என்பதை உறுதிசெய்ய, வளாகத்தைச் சுற்றிலும் அவசரநிலை மற்றும் பாதுகாவல் அதிகாரிகள் மேற்கொள்ளும் சுற்றுக்காவலும் சோதனைகளும் அதிகரிக்கப்பட உள்ளன.
புதிய நடவடிக்கைகளை விளக்கி தனது மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) மின்னஞ்சல் ஒன்றை பல்கலைக்கழகம் அனுப்பி உள்ளது.
மின்சிகரெட் பயன்படுத்துவோர், விற்போர் அல்லது அவற்றை வைத்திருப்போர் பற்றிய தகவலை இந்த அதிகாரிகளிடம் 24 மணிநேர நேரடித் தொலைபேசி வாயிலாகத் தெரிவிக்கலாம் என்று துணைப் பேராசிரியர் ஸ்டெல்லா டான் அந்த மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.
மேலும், மின்சிகரெட் பற்றிய தகவல்களை பல்கலைக்கழகத்தின் தகவல் தளங்களிலும் தெரிவிக்கலாம் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்தி, பிடிபடும் மாணவர்கள் பற்றி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகமும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சலைக் கண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.
மீண்டும் அதே குற்றத்துக்காப் பிடிபடும் மாணவர்கள் இடைநீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்வர் என்றும் திருவாட்டி டான் எச்சரித்துள்ளார்.