பல்பொருள் அங்காடியில் பணிபரிந்த காசாளரின் கழுத்தில் உலோகக் கம்பை வைத்து மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற குற்றத்துக்காக ஆடவர் ஒருவருக்குச் சிறைத் தண்டனையும் பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
26 வயது ஹேரி சியா யின் சியாங்கிற்குத் திங்கட்கிழமை (ஜூலை 21) இரண்டு ஆண்டுகள், ஆறு மாதச் சிறையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
குற்றத்தை அவர் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியன்று புரிந்தார்.
சிகரெட் வாங்க தமது பாட்டி பணம் தராததால் தம்மீது அவர் பாசம் வைத்திருக்கவில்லை என்ற முடிவுக்கு வந்தார் சியா.
இவ்வாறு இருப்பதைவிட காவல்துறையினரால் கைது செய்யப்படுவது மேல் என அவர் கருதினார்.
அதிகாலை 3 மணி அளவில் சுவா சூ காங்கில் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் அவர் நுழைந்தார். கடையிலிருந்து குளிர்பானப் புட்டி ஒன்றைத் திருடியதாக அங்கிருந்த காசாளரிடம் சியா கூறினார்.
அந்தக் குளிர்பானப் புட்டியைத் திருப்பிக் கொடுத்தார் சியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது என்று அந்த 53 வயது காசாளர் தெரிவித்தார்.
இதையடுத்து, சியா அக்கடையிலிலிருந்து வெளியேறினார்.
தொடர்புடைய செய்திகள்
பிறகு, மீண்டும் அக்கடைக்குச் சென்றார்.
இம்முறை அவர் கையில் உலோகத் தடி ஒன்று இருந்தது.
அதை அவர் அந்தக் காசாளரின் கழுத்தில் வைத்து மிரட்டினார்.
பணப்பெட்டியில் இருந்த பணத்தைத் தம்மிடம் தரும்படி காசாளரிடம் சியா கூறினார்.
கடையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாக சியாவிடம் காசாளர் தெரிவித்தார்.
இதையடுத்து, அக்கடையிலிலிருந்து சியா வெளியேறினார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்த இரண்டு மணி நேரத்துக்குள் சியா கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதியன்று ஈசூன் வட்டாரத்தில் சியா ‘நக்கல்டஸ்டர்’ எனப்படும் ஒருவகை ஆயுதத்துடன் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.