சமூகச் சேவைக்காக கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக விருது

2 mins read
dcc17c7c-e6db-4236-8ae5-82cd66ccaa96
இந்தியத் துணைத் தூதர் பூஜா டில்லு (வலது) திரு கேரி ஹேரிஸுக்கு விருதை வழங்கினார். - படம்: சிங்கப்பூர் இந்திய தூதரகம்

சமூகத்திற்கு உதவிக்கரம் நீட்டியதற்கும் சமூக சேவைக்குப் பங்களித்ததற்கும் ராயல் கிங்ஸ் குழுமத்தைச் சேர்ந்த திரு கேரி ஹாரிசுக்கு அண்மையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. 

சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த தீபாவளி நிகழ்ச்சியில்  சமூக சேவைக்கான உன்னதநிலை விருது அவருக்கு வழங்கப்பட்டது.

திரு ஹாரிஸ், 51, பல ராயல் கிங்ஸ் குழுமத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களுடன் இணைந்து வெளிநாட்டு ஊழியர்களின் ஆர்வலராகவும் வழிகாட்டியாகவும் இருந்து வந்துள்ளார். அவர் ராயல் கிங்ஸ் குழுமத்தில் மூத்த வணிக மேம்பாட்டு மேலாளராக இருக்கிறார்.

அனுபவமிக்க சமுதாயத் தலைவருமான அவர் பலமுறை, அவசர காலங்களில் துரிதமாகச் செயல்பட்டு சமுதாயத்திற்கு 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பங்களித்து வருகிறார்.

அக்டோபர் ஐந்தாம் தேதியன்று செம்பவாங் பொழுதுபோக்கு நிலையத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி சிங்கப்பூர், இந்தியாவிற்கு இடையேயான 60 ஆண்டுகால அரசதந்திர நட்புறவின் கொண்டாட்டத்தையும் குறித்தது. அது இரு நாடுகளுக்கு இடையேயான நீடித்த பிணைப்பையும் பிரதிபலித்தது.

ராயல் கிங்ஸ் குழுமத்தின் தலைமையில் 70க்கும் மேற்பட்ட கலைஞர்கள், 120 தொண்டூழியர்கள் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சியில் வண்ணமயமான பண்டிகைக்கால உணர்வு தென்பட்டது.

இந்தியாவும் சிங்கப்பூரும் 60 ஆண்டுகளாக வலுவான பல்வகைப்பட்ட கூட்டாண்மையை வளர்த்து வந்துள்ளன.

வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பத்தில் உள்ள வலுவான ஒத்துழைப்பு முதல் ஆழமான கலாசார, கல்வி, பரிமாற்றங்கள் வரை இந்திய-சிங்கப்பூர் உறவானது மக்களிடையேயான தொடர்புக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது.

கடந்த பத்தாண்டுகளாக உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்திய வர்த்தகர்கள், சிங்கப்பூரில் புதிதாகத் தங்கள் தொழில்களை நிறுவுவதற்கு ராயல் கிங்ஸ் குழுமம் உதவி வருகிறது.

குறிப்புச் சொற்கள்