பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலை (ஜிசிஇ ‘என்’ நிலை) தேர்வுகளை இவ்வாண்டு எழுதிய மாணவர்கள் தங்களின் முடிவுகளை டிசம்பர் 18ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்குப் பெற்றுக்கொள்வர்.
இதற்கான அறிவிப்பைக் கல்வி அமைச்சு, சிங்கப்பூர் தேர்வு, மதிப்பீட்டுக் கழகம் ஆகியவை இணைந்து வியாழக்கிழமையன்று (டிசம்பர் 11) வெளியிட்டன.
மாணவர்கள் தங்கள் உயர்நிலைப் பள்ளிகளிலிருந்து தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நேரடியாகச் சென்று தேர்வு முடிவுகளைப் பெறமுடியாதோர், அவற்றைப் பெற்றுக்கொள்ள தங்களின் சார்பில் ஒருவரை நியமிக்கலாம்.
அத்தகைய மாணவர்கள் தங்கள் பள்ளிகளைத் தொடர்புகொண்டு தங்களுக்குப் பதிலாகத் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ள வருவோர் எடுத்துவர வேண்டிய ஆவணங்கள் குறித்து கேட்டறியலாம்.
தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதிய மாணவர்கள் இணையம்வழி டிசம்பர் 18ஆம் தேதி பிற்பகல் 2.45 மணியிலிருந்து 2026ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி இரவு 11 மணிவரை தங்கள் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் பாடத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், டிசம்பர் 18ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கும் டிசம்பர் 22ஆம் தேதி மாலை ஐந்து மணிக்கும் இடையே அதன் இணையத்தளத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

