கொரோனா தொற்றால் நெருக்கடி அதிகரித்துவரும் நிலையில், வேலைகளையும் பொருளியலையும் பாதுகாப்பதற்காகக் காப்புநிதியில் இருந்து அரசாங்கம் $17 பில்லியன் பணத்தை எடுக்கவிருக்கிறது.
காப்பு நிதியிலிருந்து இவ்வளவு பெரிய தொகை எடுக்கப்படவிருப்பது இதுவே முதல்முறை. இதற்கு அதிபர் ஹலிமா யாக்கோப் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கிவிட்டதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்குமுன் ஒரே ஒருமுறை காப்பு நிதியில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டில் உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்பட்டபோது $4.9 பில்லியன் எடுக்கப்பட்டது. ஆயினும், வேலைகளைத் தக்கவைக்கும் உதவித் திட்டங்களுக்காக $4 பில்லியன் மட்டும் செலவிடப்பட்டது.
பொருளியல் நிலைமை சீரடைந்ததும் 2011ஆம் ஆண்டில் அந்தத் தொகை மீண்டும் காப்பு நிதியில் சேர்க்கப்பட்டுவிட்டது.
நிலைமை மேலும் மோசமடைந்து, தேவைப்படும் பட்சத்தில் காப்பு நிதியில் இருந்து மேலும் பணம் எடுக்க தாம் பரிந்துரைக்கத் தயாராக இருப்பதாகவும் துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.
“கொரோனா தொற்று நம் நாட்டிற்குப் பல அச்சுறுத்தல்களை விடுத்துள்ளது. இதுபோன்ற இக்கட்டான சூழலுக்காகத்தான் நாம் காப்பு நிதியைச் சேமித்து வைத்துள்ளோம்,” என்றார் நிதியமைச்சருமான திரு ஹெங்.