சளிக்காய்ச்சலுக்கு எதிராக போட்டுக்கொள்ளப்படும் இரு வகையான தடுப்பூசிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. SKYCellflu Quadrivalent மற்றும் VaxigripTetra ஆகியன இந்தத் தடுப்பூசிகள்.
தென்கொரியாவில் இந்தத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட சிலர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சும் சுகாதார அறிவியல் ஆணையமும் நேற்று முன்தினம் தெரிவித்தன.
தென்கொரியாவில் இந்தத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட பிறகு 36 பேர் மரணம் அடைந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் முன்னதாக செய்தி வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், சிங்கப்பூரில் இந்தத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட பிறகு உயிர் இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சும் சுகாதார அறிவியல் ஆணையமும் தெரிவித்தன.
சளிக்காய்ச்சலுக்கு எதிராக தென்கொரியாவில் ஏழு வகையான தடுப்பூசிகள் மக்களுக்குப் போடப்பட்டிருந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தகவல் வெளியிட்டனர். அவற்றைப் போட்டுக்கொண்டவர்களில் 36 பேர் மரணமடைந்தனர்.
அந்த ஏழு மாதிரியான தடுப்பூசிகளில் மேற்கூறப்பட்ட இரு வகை சிங்கப்பூரில் கிடைக்கின்றன.
தடுப்பூசி போட்டுக்கொண்டது தொடர்பில் தென்கொரியாவில் பதிவான மரணங்களின் தாக்கத்தை சுகாதார அறிவியல் ஆணையம் மதிப்பிட்டு வருகிறது. இந்நிலையில் அந்த இரு வகையான தடுப்பூசிகளின் பயன்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்களிடம் சுகாதார அமைச்சு கூறி உள்ளது.
எனினும், சளிக்காய்ச்சல் பருவத்தை முன்னிட்டு சிங்கப்பூருக்கு வரவழைக்கப்பட்ட வேறு இரு மாதிரியான தடுப்பூசிகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று சுகாதார அமைச்சும் சுகாதார அறிவியல் ஆணையமும் தெரிவித்தன.
எந்தவொரு மருந்தையும் போன்று தடுப்பூசிகளும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். காய்ச்சல், தலைவலி, தசைவலி, சோர்வு, குமட்டல் உள்ளிட்டவை பக்கவிளைவுக்கான சில அறிகுறிகள்.
“பொதுவாக இந்தப் பக்கவிளைவுகள் இலேசாக இருக்கும் என்றும் அவை தானாகவே குணமாகிவிடும் என்றும் கூறப்படுகிறது. அரிதான சில வேளைகளில், கடும் காய்ச்சல் அல்லது மூச்சுத்திணறல், கண்வீக்கம் போன்ற கடுமையான ஒவ்வாமை ஏற்படலாம். அப்போது உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்,” என்று இரு அமைப்புகளும் அறிவுறுத்தியுள்ளன.