உள்ளூர் நிறுவனங்கள் பசுமைப் பொருளியலில் வாய்ப்புகளைப் பெறுவதற்கான திறன்களை வளர்ப்பதில் கைகொடுக்க புதிய திட்டம் ஒன்று நேற்று தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு $180 மில்லியனை ஒதுக்கும். இதன் மூலம் அடுத்த நான்காண்டுகளில் குறைந்தபட்சம் 6,000 நிறுவனங்கள் பலன்பெறும் என்று எதிர்பார்க்கப்
படுகிறது.
'நிறுவனங்களுக்கான நீடித்த
நிலைத்தன்மைத் திறன் திட்டம்' இவ்வாண்டு வரவுசெலவுத் திட்ட அறிக்கையின்போது அறிவிக்கப்பட்டது. பயிற்சிப் பட்டறைகளை நடத்துவதன் மூலம் பசுமை வழியில் நடைபோட நிறுனங்களை ஆதரித்து நிதியளிப்பது திட்டத்தின் நோக்கம்.
பருவநிலை மாற்றம் தொடர்பான அக்கறைகள் எழுந்துள்ள சூழலில் இது நிறுவனங்களுக்கு மிகவும் அவசியம். கரியமில பயன்பாட்டைக் குறைத்து நீடித்து நிலைத்து இருப்பதற்கான நடைமுறைகளில் அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பெரிதும் கவனம் செலுத்தும் நேரம் இது என்று வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்தார்.
"இந்த அம்சத்தில் நிறுவனங்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. நீடித்து நிலைத்திருப்பதற்கான திறன்களை தங்களது உத்தி மற்றும் நடைமுறைகளில் ஒருங்கிணைப்பதில் நிறுவனங்கள் கவனம் செலுத்துவது அதிகரித்து வருகிறது. இன்னும் பல நிறுவனங்கள் இதனைத் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன," என்றார் அவர்.
திரு கான், வர்த்தக தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங்குடன் இணைந்து மெய்நிகர் வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதனைக் கூறினார்.
பசுமைப் பொருளியல் வாய்ப்புகளைப் பெற உள்ளூர் நிறுவனங்களுக்கு உதவி